அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ மற்றும் ‘பாகல்’ வெப்சீரிஸை பார்த்து, அதேபோல் பிரபலமடைவதற்காக இளைஞர் ஒருவரை, 3 சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில், ஜஹாங்கீர்புரி என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தென்னிந்திய நடிகர்களின் படங்களுக்கு தற்போது வட இந்தியாவில் நல்ல மார்க்கெட் நிலவி வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் 17-ம் தேதி வெளியான அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படம், வட இந்தியாவில் பெரும் வசூல் புரிந்து சாதனை படைத்துள்ளது. மேலும், அதில் வரும் அல்லு அர்ஜூனின் டயலாக்குகள் பிரபலமடைந்தன. இந்நிலையில் அந்தப் படத்தைப் பார்த்து உத்வேகம் அடைந்த சிறுவர்கள் 3 பேர், ஜஹாங்கீர்புரி பகுதியில் கடை ஒன்றில் வேலைப் பார்த்துவந்த, 24 வயது இளைஞரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அந்த இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அந்த சிறுவர்கள், தங்களது செல்ஃபோனில் வீடியோவும் எடுத்து, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யவும் நினைத்துள்ளனர். இதன்மூலம் பிரபலம் அடையலாம் என்றும் எண்ணியுள்ளனர்.
இதற்கிடையில், சிறுவர்களால் கத்தியால் குத்தப்பட்டு வயிற்றில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர், அங்குள்ள பாபு ஜகஜீவன் ராம் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை உயிரிழந்தார். இளைஞர் உயிரிழந்தது குறித்து மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சிறுவர்கள் இளைஞருடன் வாக்குவாதம் நடத்தி கொலை செய்தது கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளில் அடிப்படையில், சிறுவர்களைப் பிடித்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘புஷ்பா’ படம் போன்று பிரபலமடைவதற்காக இவ்வாறு செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அல்லு அர்ஜூன் அந்தப் படத்தில் பேசும் ‘நான் யாருக்கும் அடங்காதவன் டா’ என்ற அந்த டயலாக்கையும் இமிடேட் செய்து பேசியுள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, டி.சி.பி. உஷா ரங்நானி தலைமையிலான போலீசார், சிறுவர்களை கைதுசெய்து அவர்களிடமிருந்து சம்பவத்தின்போது வீடியோ எடுத்த செல்ஃபோன் மற்றும் கத்தியை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.