கொரோனா தொற்று பரவல் உலகின் இயல்பு நிலையை ரொம்பவே முடக்கிப்போட்டுள்ளது. இதோ முடியும், அதோ முடியும் என உலக மக்கள் கொரோனாவின் முடிவை எதிர்பார்த்துள்ளனர். ஆனால் ‘எனக்கு எண்ட் கார்டே கிடையாது’ என்ற தொனியில் உலகம் முழுவதும் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது இந்த கொடூர வைரஸ். அதனால் மாஸ்க் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது, சமூக விலகலை கடைப்பிடிப்பது பூவுலகில் மக்கள் உயிர் வாழ அவசியமானதாக மாறியுள்ளது.
இத்தகைய பேரிடர் காலத்தில் இல் வாழ்கையில் இணைய முடிவு செய்த இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இளம் தம்பதியர் தங்கள் திருமண விழாவை டிஜிட்டலாக நடத்த முடிவு செய்துள்ளனர். அதனால் அவர்களது மண விழாவில் விருந்தினர்களை கூகுள் மீட் மூலமாக இணைத்தும், சொமேட்டோ மூலமாக கல்யாண விருந்து வைத்து அசத்தவும் திட்டமிட்டுள்ளார்கள்.
“வரும் 24-ஆம் தேதி நானும், அதிதி தாஸூம் திருமணம் செய்து கொள்ள உள்ளோம். தற்போது கொரோனா தொற்று பரவி வருகின்ற காரணத்தால் திருமண நிகழ்வுகளில் 200 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டுமென மாநில அரசு விதிமுறைகள் தெரிவிக்கின்றன. அதனால் எங்கள் திருமண விழாவில் விருந்தினர்களை கூகுள் மீட் மூலமாக இணைக்க முடிவு செய்தோம். ஏனெனில் நானும் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். எங்கள் திருமண விழாவில் பங்கேற்கும் எங்களது குடும்பம் மற்றும் விருந்தினர்களுக்கு தொற்று பரவக் கூடாது என முடிவு செய்தேன். அதன்படி திருமண வைபவத்தை இணையத்தின் மூலம் லைவ் டெலிகாஸ்ட் செய்ய முடிவு செய்தேன். இதற்கு எனது இணையரும் சம்மதம் சொன்னார். இப்போது கூகுள் மீட் வழியாக விருந்தினர்கள் அனைவரும் அவரவர் இருக்கும் இடத்தில் பத்திரமாக இருந்தபடி எங்கள் திருமண விழாவில் பங்கேற்க உள்ளார்கள். அவர்களுக்கு எங்கள் கல்யாண விருந்தை சொமேட்டோ மூலம் டெலிவரி செய்ய உள்ளோம்” என மணமகன் சந்தீபன் சர்க்கார் தெரிவித்துள்ளார்.
இவர்களது திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டும் நேரில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சொமேட்டோ நிறுவனம் இந்த திருமண டெலிவரி ஆர்டரை கண்காணிக்க குழு ஒன்றையும் அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்றதொரு டிஜிட்டல் கல்யாணம் தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதியர் அண்மையில் ஏற்பாடு செய்ததும் குறிப்பிடத்தக்கது.