மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரை சேர்ந்த ரேணுகா ஷிண்டே மற்றும் சீமா காவித் ஆகிய இரண்டு சகோதரிகளும் திருட்டுத் தொழில் செய்து வந்தனர். அவர்கள் 1990-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை, தங்க செயின் அணிந்திருக்கும் குழந்தைகளைக் கடத்திச் சென்று செயினை பறிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவ்வாறு கடத்திய 13 குழந்தைகளில் 5 குழந்தைகளை கொலை செய்துவிட்டனர்.
இந்தக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இரண்டு சகோதரிகளுக்கும் கோலாப்பூர் விசாரணை நீதிமன்றம் 2001-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. 2004-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றம் அவர்களின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. 2006-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டும் தூக்கை உறுதி செய்து உத்தரவிட்டது. 1996-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதியில் இருந்து இருவரும் சிறையில் இருந்து வருகின்றனர்.
Also Read: `பாம்பின் தலையைப் பிடித்து மனைவியை கடிக்க வைத்துள்ளார்’- கேரள கொலையில் கணவர் குற்றவாளி என தீர்ப்பு!
இந்நிலையில், சகோதரிகள் இருவரும் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்திருந்தனர். ஜனாதிபதியும் 2014-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி அவர்களின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.
இதையடுத்து 2014-ம் ஆண்டு இருவரும் தங்களது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், “எங்களது கருணை மனுக்களை மாநில அரசு காரணமே இல்லாமல் நியாயமற்ற முறையில் தாமதப்படுத்தியது. எனவே எங்களது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர்.
சகோதரிகள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அங்கித், “2006-ம் ஆண்டே ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை இரண்டு பேரும் அனுப்பிவிட்டனர். ஆனால் அதனை மாநில அரசு ஆளுநருக்கு அனுப்பி அவர் முடிவு எடுக்கத் தாமதம் ஆகிவிட்டது. ரேணுகா ஷிண்டே தரப்பில் 2008-ம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதிக்கு ஒரு கருணை மனு அனுப்பப்பட்டது. ஏற்கெனவே அவரின் கருணை மனு ஆளுநரிடம் நிலுவையில் இருந்ததால் அதனை ஜனாதிபதி ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.
2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சீமா தரப்பில் ஒரு கருணை மனு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் 2012, 2013-ம் ஆண்டுகளில் இருவரது கருணை மனுக்களையும் தனித்தனியாக நிராகரித்தார். 2014-ம் ஆண்டு ஜனாதிபதியும் கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார். கடந்த 13 ஆண்டாக இருவரும் உயிர் பயத்தில் வாழ்ந்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருணா ராய், “குற்றத்தின் தீவிரம் மற்றும் கொடூரத்தை கவனத்தில் கொண்டு மரண தண்டனையை ஒதுக்கிவிட முடியாது” என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சகோதரிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டனர். கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க 7 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஃபைல்கள் ஒவ்வொரு துறையிலும் மிகவும் மந்தமான முறையில் நகர்ந்திருப்பதாகச் சுட்டிக்காட்டினர்.
Also Read: திருவண்ணாமலை: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பள்ளி மாணவி! – இளைஞர் உட்பட 3 பேர் போக்சோவில் கைது
மாநில அரசின் இந்தத் தாமதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். கருணை மனுக்களை காரணமில்லாமல் தாமதப்படுத்துவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருப்பதையும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டினர்.
சகோதரிகள் இருவரும், தாங்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் தங்களை விடுவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் நிதின், சரங்க் கோட்வால், “குழந்தைகள் மிகவும் கொடூரமாகக் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது” என்று தெரிவித்தனர்.