நீட் தேர்வு விவகாரம்: “தமிழக ஆளுநர் பதவி விலகவேண்டும்!” – டி.ஆர்.பாலு
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, குளிர்காலக் கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.பி-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தமிழக அரசு நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தது. ஆனால், ஆளுநர் இந்த மசோதா விவகாரத்தில் தொடர்ந்து காலம்தாழ்த்தி வருவதற்காகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசியல் கட்சியினர் தமிழக ஆளுநர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக எம்.பி டி.ஆர்.பாலு டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில், நீட் தேர்வு விவகாரத்தில் காலம்தாழ்த்திக் கொண்டிருக்கும் தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று கூறியிருக்கிறார். திமுக எம்.பி-யின் இந்த பேச்சு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டி.ஆர்.பாலு, “தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் மசோதா நிலுவையிலிருப்பதற்கு ஆளுநர் தான் பொறுப்பு. அதனால் ஆளுநர் பதவி விலக வேண்டும்” என்றார்.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு!
தமிழக மருத்துவத்துறை அமைச்சர், மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்துவருவதால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். இதன் காரணமாக சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் சனிக்கிழமை நடைபெறும்” என்றார். மேலும் அவர் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றார்!
`7-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்!’
இன்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 7-ம் தேதி, அதாவது வெள்ளிக்கிழமை வரை நடைபெறவிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நாளை மற்றும் நாளை மறுநாள் விவாதம் நடைபெறும் என அலுவல் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்த முறை இரு தினங்கள் மட்டுமே சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மண்டபம் பகுதி மீனவர்கள் 12 பேர் விடுதலை!
ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 19-ம் தேதி மீன்பிடிக்க சென்று தலைமன்னார் – தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 விசைப்படகு 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, மன்னார் கடற்படை முகாம் வைத்து விசாரணை நடத்தி கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து 12 தமிழக மீனவர்களையும் 3ம் தேதி வரை வவுனியா சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஜனவரி 3-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட காவல் முடிவடைந்ததை அடுத்து தமிழக மீனவர்கள் 12 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து 12 தமிழக மீனவர்களையும் இன்று வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து இன்று மீண்டும் மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டதை அடுத்து 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
`அரசியல் நோக்கத்துக்காகவே ஜெயலலிதா இல்லம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது!’
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான, சென்னை போயஸ் தோட்டத்திலுள்ள வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றுவதற்கான உத்தரவு ரத்துசெய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, “பொது நோக்கத்துக்காக இல்லாமல் அரசியல் நோக்கத்துக்காகவே ஜெயலலிதா இல்லம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது” என்று அதிமுக-வின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, முன்னர் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை உறுதிசெய்திருக்கிறது.
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து… இரண்டு பேர் பலி
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில் இன்று காலை தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இரண்டு அறைகள் முற்றிலும் இடிந்து தரை மட்டமாகின. இதில் காயமடைந்த செந்தில்குமார், கருப்பசாமி , அய்யம்மாள், சரஸ்வதி ஆகிய நான்கு பேர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில், செந்தில்குமார், கருப்பசாமி ஆகியோர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தனர். காயமடைந்த ஐந்து பேர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
ஜெயலலிதா நினைவு இல்லம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான, சென்னை போயஸ் தோட்டத்திலுள்ள வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றுவதற்கான உத்தரவு ரத்துசெய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவிருக்கிறது.
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற, கடந்த அதிமுக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ரத்துசெய்து, வேதா நிலையத்தை, ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து அதிமுக தரப்பிலும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினர் சி.வி.சண்முகம் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு, தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் முடிந்த நிலையில், நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், சத்திகுமார் சுகுமார குரூப் அமர்வு இன்று தீர்ப்பளிக்கவிருக்கிறது.
ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது சட்டமன்ற கூட்டத்தொடர்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முன்னதாக இந்தக் கூட்டத்தொடர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடக்கவிருப்பதாகவும், முதன்முறையாக கேள்வி நேரம் உள்ளிட்ட நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் எனவும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவந்தன. ஆனால், ஒமைக்ரான் பரவல் காரணமாக, இந்தக் கூட்டத்தொடரும் சென்னை கலைவாணர் அரங்கிலேயே நடக்கிறது.
கலைவாணர் அரங்கத்தில் காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். அதன் பின்னர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடராக இருப்பதால், ஆளுநர் உரையில் பல முக்கிய விஷயங்கள் இடம்பெறவிருப்பதாகக் கூறப்படுகிறது.