ஒமைக்ரான் பரவலைக்கட்டுப்படுத்த ஒத்துழைப்பு கொடுங்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ”வணக்கம். உங்கள் எல்லோருக்கும் என் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு சிறப்பாக அமையவேண்டும் என்பதுதான் நம் எதிர்பார்ப்பு. அதனால், கடந்த ஆண்டு தந்த பாடங்களை நாம் மறந்துவிடக்கூடாது. 2 அலைகளிலிருந்து நாம் மீண்டு வந்துள்ளோம். 2ம் அலை உச்சத்தில் இருக்கும்போது தான் நான் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டேன். அமைச்சர்கள், அதிகாரிகள் உதவியால் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது.
தடுப்பூசி செலுத்தியதால் கொரோனா பரவலையும், இறப்பு எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த முடிந்தது. அதேபோல, ஒமைக்ரானை நாம் கட்டுபடுத்த வேண்டும். ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த இந்த அரசு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுத்துக்கொண்டுவருகிறது. தமிழகத்தில் சிகிச்சைக்கு தேவையான எல்லா வசதிகளும் உள்ளது. யாரும் பயப்படத்தேவையில்லை. உங்கள் ஒத்துழைப்புத்தான் எங்களுக்குத் தேவை. ஒமைக்ரான் பரவலைக்கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.