விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள சிறு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், கடந்த 13-ம் தேதி தன் தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். தன் மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, கடந்த 15-ம் தேதி திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக வழக்கு பதிந்த மகளிர் காவல்துறையினர், விசாரணையை தொடங்கியபோது, சிறுமி கடத்தப்பட்டது தெரியவந்திருக்கிறது.

சிறுமி கடத்தலில் தொடர்புடைய மூவர்

சிறுமியின் மொபைல் போன் சிக்னலை சைபர் க்ரைம் போலீஸார் கண்காணித்தபோது, ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்திருக்கிறது. அதையடுத்து, சிறுமி செல்போனின் ஐ.எம்.இ நம்பர் மூலம் கண்காணித்திருக்கின்றனர். அப்போது, செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூர் அடுத்த புவனேஸ்வரி நகர் பகிதியில் சிறுமியின் செல்போன் சிக்னல் காட்டியிருக்கிறது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற திண்டிவனம் மகளிர் காவல் துறையினர், அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டனர். இந்தக் குற்ற செயலில் சம்பந்தப்பட்ட போலி சாமியார் ஒருவர் உட்பட மூன்று நபர்களை கைது செய்திருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்திருக்கின்றன. கடந்த 13-ம் தேதி வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு சென்ற சிறுமி, கீழ் ஆதனூர் பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த போலி சாமியார் எல்லப்பன் என்பவர், ஆட்டோவை நிறுத்தி சிறுமியை வலுக்கட்டாயமாக உள்ளே ஏற்றியிருக்கிறார். சிறுமி தான் திண்டிவனத்தில் இறங்கவேண்டும் என அவரிடம் கூறியிருக்கிறார். அதன்படி திண்டிவனத்தில் நிறுத்துவதாக கூறிவிட்டு, மதுராந்தகம் பகுதிக்கு கடத்திச் சென்றிருக்கிறார். பின்னர், மதுராந்தகம் அடுத்த சிறுபேர்பாண்டி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபு (எ) அப்பு (33) வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்முறையில் இறங்கியிருக்கிறார் எல்லப்பன். இந்த நிலையில்தான், தங்கள் மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

சிறுமியை ஆட்டோ டிரைவர் பிரபுவின் வீட்டில் சுமார் ஐந்து நாள்கள் அடைத்துவைத்து பாலியல் தொந்தரவு அளித்து வந்த போலி சாமியார் எல்லப்பன், போலீஸார் சிறுமியை தேடுவதை அறிந்து, செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் புவனேஸ்வரி நகரில் வசித்து வரும் சின்னப்பையன் (53) என்பவரது ஆட்டுக் கொட்டகையில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். இந்த நிலையில், செல்போன் ஐ.எம்.இ நம்பரை கொண்டு கண்காணித்து, சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு நேற்று சென்றிருக்கின்றனர் திண்டிவனம் மகளிர் காவல்துறையினர்.

திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையம்.

Also Read: போக்சோ: டியூஷனுக்கு வந்த 9 வயது பள்ளிச் சிறுமியிடம் பாலியல் சீண்டல்! – இளைஞருக்குச் சிறை

அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டதோடு, போலி சாமியார் எல்லப்பன், அவருக்கு உடந்தையாக இருந்த சின்னப்பையன், ஆட்டோ டிரைவர் பிரபு ஆகியோரை கைது செய்தனர். IPC-ல் நான்கு பிரிவுகளின் கீழும், போக்சோ சட்டத்தில் நான்கு பிரிவுகளின் கீழும், மொத்தம் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மகளிர் காவல் துறையினர், மூன்று பேரையும் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விழுப்புரம் துணை சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.