சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கேரளாவின் பிரசித்திபெற்ற சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 16-ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஐயப்ப பக்தர்களின் 41 நாள் விரதகாலம் முடிவடைந்து, கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்து சபரிமலை நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில், மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.

image

இதையடுத்து இன்று முதல் ஐயப்ப பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று அதிகாலை மூன்று மணிக்கு பள்ளி உணர்தலோடு சபரிமலை நடை 4 மணிக்கு திறக்கப்பட்டது. நடை திறப்பிற்கு முன்பே நள்ளிரவில் இருந்து ஐயப்ப பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் அலைமோதியது. வழக்கமான பூஜைகளுக்கு பின் அதிகாலை 4 மணியிலிருந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கூட்டத்தால் நடை பந்தலில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

image

பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் பணி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 19-ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 14-ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கிறது.

image

ஜனவரி 20-ஆம் தேதி பந்தள அரண்மனை குடும்பத்தாரின் ஆச்சார வழிபாடுகள் மற்றும் சடங்குகளை தொடர்ந்து அன்று இரவு சபரிமலை நடை அடைக்கப்படும். நாளை புத்தாண்டு என்பதால், சபரிமலையில் புத்தாண்டு சிறப்பு தரிசனத்திற்காக ஐயப்ப பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.