சமூகவலைதளத்தில் ‘நான் தான் அம்மன் அவதாரம்’ எனக் கூறி வீடியோ வெளியிட்டுக்கொண்டிருக்கும் அன்னபூரணி அரசு என்ற பெண், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் அன்னபூரணி சிலருக்கு ஆசி வழங்கும் காட்சி சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் இன்று புகார் அளித்துள்ளார். அப்புகாரில், தான் ‘இயற்கை ஒலி’ என்ற அமைப்பு மூலமாக ஆன்மிக பயிற்சி வகுப்புகள் நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னைப் பற்றி சிலர் அவதூறு பரப்பி வருவதாகவும், மாரடைப்பால் இறந்த தன் கணவரின் மரணத்தை ‘மர்ம மரணம்’ என்றும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக சிலர் வதந்தி பரப்புவதாகவும் அன்னபூரணி குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து தான் இனி ஆன்மிக சேவையில் ஈடுபடக்கூடாது என சிலர் செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ள அவர், தனக்கும் தனது சீடர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டுமென அன்னப்பூரணி கேட்டுக் கொண்டுள்ளார்.
சமீபத்திய செய்தி: ’கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை’- நடுவானில் நாடு திரும்பிய அமெரிக்க விமானம்