மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளர் கோ.சண்முகநாதன் சற்றுமுன் காலமானார். சுமார் 50 ஆண்டுகாலம் கருணாநிதியின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர். உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்துவிட்டார்.

கருணாநிதி – சண்முகநாதன்

சட்டமன்றம், முரசொலி அலுவலகம், அறிவாலயம், கோபாலபுர இல்லம், அரசியல் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் என கருணாநிதி செல்லும் அத்தனை இடங்களுக்கும் உடன்செல்லும் ஒரே நபராக இருந்து, கருணாநிதியின் நிழலாக செயல்பட்டவர் கோ.சண்முகநாதன். ஆரம்பத்தில் காவல்துறையில் சுருக்கெழுத்துப் பணியாளராக பணியாற்றிய சண்முகநாதன், பல்வேறு வரலாற்று நூல்களை எழுதியிருக்கிறார். கருணாநிதியின் அழைப்பின் பேரில், தமிழக சட்டமன்ற மேலவையில் சுருக்கெழுத்துப் பணியாளராக சேர்ந்தார். அதன்பின்னர், 1969-ம் ஆண்டு கருணாநிதியின் நேர்முக உதவியாளராக சேர்ந்துகொண்டார்.

கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன்

ஒருமுறை சண்முகநாதனைப்பற்றி பேசிய கருணாநிதி, “என்னைப் பொறுத்த வரையில் சண்முகநாதன், என் அலுவலகத்தில் வேலைபார்ப்பவர் என்பதைவிட, என் அகத்தில் இருந்து பணியாற்றுபவர். சம்பளத்துக்காக வந்தவர் அல்ல. இந்த இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் அளவுக்கு என்னோடு கலந்து விட்டவர்” என உருக்கமாக கூறியிருந்தார்.

சண்முகநாதனின் மரணம் தி.மு.க-வினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.