தீவிரவாத நடவடிக்கைகளை கண்டறிய உளவு அமைப்பு உள்ளது போல சாதி, மத ரீதியில் பிளவு ஏற்படுத்துபவர்களை கண்டறியும் வகையில் தனியாக உளவு புலனாய்வு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
திருவள்ளூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ”சேலத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தி திட்டமிட்டு இரு சமூகத்தினர் இடையே பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்போர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சாதி கலவரத்தை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேட சாதிவாத, மதவாத சக்திகள் முயற்சித்து வருகிறது. இதனை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்துவது தமிழ்நாட்டின் நலன்களுக்கு உகந்ததாக இருக்கும். சாதி சண்டைகளையும், மத சண்டைகளையும் மூட்டிவிட்டால் இங்கே காலூன்றி விடலாம் என துடிக்கும் அரசியல் கட்சிகள், மதவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவது அவசியம்.
இந்தியாவில் மதரீதியில் மோதல் ஏற்படாத மாநிலம் தமிழ்நாடு. இங்கு மத ரீதியில் மோதல் ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதால் முதலமைச்சர் விழிப்புடன் இருந்து அதனை கட்டுப்படுத்த வேண்டும். தீவிரவாத நடவடிக்கைகளை கண்டறிய உளவு அமைப்பு உள்ளது போல சாதி, மத ரீதியில் பிளவு ஏற்படுத்துபவர்களை கண்டறியும் வகையில் தனியாக உளவு புலனாய்வு அமைப்பு ஏற்படுத்த வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கம் செய்வதை கைவிட வேண்டும்” என்றார் அவர்.