இந்தியாவில் விமான சேவையை வழங்கி வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், ட்ரோன் மூலம் மருந்து மற்றும் மாத்திரைகளை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ஸ்பைஸ்எக்ஸ்பிரஸ் ட்ரோன் டெலிவரி சேவையை தொடங்க முடிவு செய்துள்ளது அந்நிறுவனம். இதற்கான அனுமதியை கடந்த ஆண்டு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடமிருந்து (DGCA) பெற்ற ஸ்பைஸ்ஜெட் தற்போது அதை நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதாம்.
முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள சுமார் 10 மாவட்டங்களில் 150 லொகேஷன்களில் இந்த சேவையை வழங்க ஸ்பைஸ்ஜெட் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மாதத்திற்கு 25 ஆயிரம் டெலிவரிகள் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாம். அதனை உறுதிப்படுத்த ட்ரோன் நிலையங்களை 10 இடங்களில் நிறுவ உள்ளதாம் அந்நிறுவனம். இதனை அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜய் சிங் உறுதி செய்துள்ளார்.
இதற்காக த்ராட்டில் என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. இந்த சேவைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 0 – 5 கிலோ, 5 – 10 கிலோ, 10 – 25 கிலோ எடையுள்ள பொருட்களை சுமந்து செல்லும் ட்ரோன்களை களம் இறக்க உள்ளதாம் அந்நிறுவனம். இந்த சேவை மூலம் போக்குவரத்து வசதிகள் முறையாக இல்லாத ரிமோட் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான மருந்துகளை கொண்டு சென்று, அவர்களுக்கு உதவ முடியும் என ஸ்பைஸ்ஜெட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.