நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட போது அது குறித்து மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். திட்டமிட்டு ஆர்யன் கான் இதில் சிக்கவைக்கப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே பாலிவுட் பிரபலங்களை மிரட்டி பணம் பறிப்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். அது மட்டுமல்லாமல் சமீர் வான்கடே போலியான சாதிச்சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சமீர் வான்கடேயின் தந்தை தியான்தேவ் வாங்கடே நவாப் மாலிக்கிற்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

சமீர் வான்கடே

இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது மேற்கொண்டு சமீர் வான்கடே குறித்து விமர்சனம் செய்ய மாட்டேன் என்று நவம்பர் 25, 29-ம் தேதிகளில் நவாப் மாலிக் உத்தரவாதம் கொடுத்திருந்தார். ஆனால் அந்த உத்தரவாதத்தை மீறி தொடர்ந்து சமீர் வான்கடேக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை நவாப் மாலிக் கூறிக்கொண்டிருந்தார். இதையடுத்து கோர்ட்டில் தெரிவித்திருந்த உத்தரவாதத்தை மீறி சமீர் வான்கடேவுக்கு எதிராக விமர்சனம் செய்ததற்கு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கடந்த 7-ம் தேதி நீதிபதிகள் காதாவாலா, மிலிந்த் ஜாதவ் கேட்டதோடு இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நவாப் மாலிக்கிற்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து நவாப் மாலிக் தனது வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்த அறிக்கையில், தான் தெரிவித்த கருத்துக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீதிமன்ற உத்தரவை மீறவேண்டும் என்பதோ அல்லது நீதிமன்றத்துக்கு அவமரியாதை ஏற்படுத்தவேண்டும் என்பதோ நோக்கம் இல்லை. பத்திரிக்கையாளர்களுடனான சந்திப்பின் போது அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எதிர்காலத்தில் அது போன்று பதிலளிக்கமாட்டேன் என்று தனது பதில் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.