உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒமைக்ரான் கொரோனா மகாராஷ்டிராவிலும் பரவி வருகிறது. நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் தொற்று அதிகமாக இருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மும்பை வந்த ஆயிரக்கணக்கானோர் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தலைமறைவாக இருக்கின்றனர் என்கிற அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளது. அவர்கள் மூலம் ஒமைக்ரான் கொரோனா பரவும் அபாயம் இருக்கிறது.
மகாராஷ்டிராவில் இதுவரை 17 பேருக்கு ஒமைக்ரான் பரவி இருக்கிறது. ஒரே நாளில் 3 வயது குழந்தை உட்பட 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பரவி இருக்கிறது. மும்பையில் மூன்று பேருக்கும், புனேயில் 4 பேருக்கும் இத்தொற்று பரவியிருக்கிறது. மும்பையில் ஒமைக்ரான் தொற்று பரவிய மூன்று பேரில் இரண்டு பேர் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். இதையடுத்து தொற்று மேற்கொண்டு பரவாமல் இருக்க மும்பையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சனி மற்றும் ஞயிற்றுக்கிழமைகளில் மும்பையில் பொதுக்கூட்டம், பேரணி போன்றவை நடத்த தடை விதிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் போதும் மகாராஷ்டிராதான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. தற்போது ஒமைக்ரான் கொரோனா தொற்றும் மகாராஷ்டிராவில் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. நாடு முழுவதும் 32 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதில் 17 பேர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். எனவே புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. வரும் 15-ம் தேதியிலிருந்து மகாராஷ்டிராவில் ஒன்று முதல் 7-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டு இருந்தது. தற்போது புதிய தொற்று காரணமாக அரசு பள்ளிகளை திறக்கும் முடிவை மறுபரிசீலனை செய்து வருகிறது.