பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 10 நாட்களில் 28 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் தற்போது அரசு தலைமை மருத்துவமனையில் 9 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
 
பருவமழை முடிந்ததும் வழக்கமாக ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் பெரம்பலூர் மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக பரவி வருகிறது. நவம்பர் மாதத்தில் 69 பேரும், டிசம்பர் தொடங்கி தற்போது வரை 10 நாட்களில் 28 பேரும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3 பேர் அருகில் உள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இது தவிர பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 2 பேர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.
 
image
புற நோயாளிகள் பிரிவில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தேங்கும் மழை நீரில் உற்பத்தி ஆகும் கொசுக்களினால் டெங்கு பரவும் என்பதால் சுகாதாரப் பணிகளை முழு வீச்சில் முடுக்கி விட வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொசுமருந்து அடித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள் பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
 
டெங்கு காய்ச்சல் உயிரிழப்பை கூட ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் மாவட்ட நிர்வாகம் டெங்குவை ஒழிக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்து நன்னீரில் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுப்பது பொதுமக்களின் பொறுப்பும் ஆகும்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.