திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு திருவள்ளூர் மாவட்டத்தில் சில மாணவர்கள் அரங்கேற்றி வரும் அத்துமீறல்கள் பெற்றோரை மட்டும் அல்லாமல் பொதுவெளியில் செல்லும் மக்களையும் கவலை அடையச் செய்துள்ளது. இதற்கு புதிய சான்றாக ஆவடி பேருந்து நிலைய பணிமனையில் காத்துக்கொண்டிருந்த மாணவிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சண்டையிடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர் அவர்களை தடுக்க முயன்றும் தாக்கிக்கொள்வதை மாணவிகள் நிறுத்தவில்லை.

இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் கல்விக் கற்றுக்கொடுத்தது என்ன? என்ற கேள்விகளும் சாமானியர்களால் முன்வைக்கப்படுகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் பள்ளி மாணவரும் மாணவியும் ஆபத்தான முறையில் பயணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்ததாக சோழவரம், மெய்யூர் பகுதியில் ஒடும் பேருந்துகளில் சாகச பயணம் செய்த பள்ளி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது காவல்துறை.

பெரியகுப்பம் பகுதியில் பட்டாக்கத்தி வைத்திருந்ததாக 8 கல்லூரி மாணவர்கள் மீதும் வழக்கு பாய்ந்திருக்கிறது. மாணவர்களை அன்பாக அணுகிய நிலையிலும் குற்றங்களில் ஈடுபடுவது நீடிப்பதால் வழக்குப்பதிவு செய்யும் நிலை ஏற்படுவதாகவும் அத்துமீறல்கள் தொடர்ந்தால் மாணவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்காது என்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கைவிடுத்துள்ளார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.