பாரத பிரதமர் நரேந்திர மோடி காசி செல்லும் அதே வேளையில் தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் தமிழக பாஜக சார்பாக தூய்மை பணி மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. அது குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
திருவாரூரில் பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்தது.
“தடுப்பூசி முகாம்களில் ஒருபுறம் பாரதப் பிரதமர் மோடியின் புகைப்படத்தையும் தமிழக அரசின் சார்பாக உங்களது மகன் உதயநிதி படத்தையும் வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்கள். ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் திட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடியை புறக்கணிப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு தன்னுடைய திட்டமாக காட்டிக்கொள்வது கண்டிக்கத்தக்கது. பாரத பிரதமர் புகைப்படத்தை போடாமல் ஒருபுறம் கருணாநிதியின் புகைப்படமும் ஒருபுறம் முதல்வர் ஸ்டாலின் புகைப்படமும் இருப்பது கண்டிக்கத்தக்கது. இது தொடர்ந்தால் பாஜக சார்பாக பெரும் போராட்டம் வெடிக்கும்.
டெல்டா மாவட்டங்களில் சம்பா தாளடி பயிர்களுக்கு, அதுவும் முற்றிலுமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடுபொருள் மானியம் வழங்குவது கேலிக்கூத்தானது. விவசாயிகள் இனிமேல் இடுபொருட்கள் விதைகள், பூச்சிக்கொல்லிகள் வாங்கி நடவு செய்வது இயலாத காரியம். விவசாயிகள் கேட்கக்கூடிய நிவாரணத் தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
மத்திய அரசு பெற்ற பிள்ளையான ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் கடந்த அதிமுக ஆட்சியில் நன்றாக வளர்க்கப்பட்டது. அதிமுக ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கிறார்கள். ஆனால் தற்போது திமுக ஆட்சியில் அந்த திட்டங்களுக்கு மாநில அரசு உரிமை கொண்டாடுவது போல தஞ்சாவூரில் நேற்று ஒரு சம்பவம் நடந்தது (முத்துவேல் கருணாநிதி வணிக வளாகம் என மாற்றி இருந்தார்கள்) பிறகு பாஜகவின் எதிர்ப்பால் மீண்டும் மத்திய அரசின் திட்டத்திற்கு சரியாக பழைய பெயரை (தஞ்சாவூர் மாநகராட்சி வணிக வளாகம்) என வைத்தார்கள். இதுபோல திமுக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.
அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது!
இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடு பாரபட்சமில்லாமல் இருக்கவேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது பாரபட்சம் காட்டாமல் செய்ய வேண்டும். தஞ்சை பெரிய கோயில் பாரம்பரியமான உலகப் புகழ்பெற்ற கோயில். அதனை புனரமைக்க மாநில அரசு மத்திய அரசுடன் இணைந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்