குளித்தலை அருகே கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இரு பெண் குழந்தைகளுடன் தாயும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குளித்தலை அருகே செம்பியநத்தம் கிராமம், பூசாரிபட்டியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் சரண்யாவுக்கும் திருமணமான நிலையில், இவர்களுக்கு கனிஷ்கா (6), புதிஷா (3) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு சக்திவேல், நாச்சிமுத்து பாளையம் கிராமத்தில் நடைபெற்ற உறவினரின் திருமணத்திற்கு சென்றதாக கூறுகின்றனர்.
இதையடுத்து சக்திவேல் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டின் அருகே உள்ள 50 அடி ஆழத்தில் கிணற்றில் சரண்யா தனது இரு குழந்தைகளுடன் குதித்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறையினர், சரண்யா மற்றும் கனிஷ்காவை சடலமாக மீட்டு 3 வயது குழந்தையை தேடி வருகின்றனர்,
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,