கன்னியாகுமரியில் மூதாட்டி ஒருவரை பேருந்திலிருந்து நடந்துநர் இறக்கி விட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி வாணியக்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வமேரி மீன் விற்று பிழைக்கும் மூதாட்டி. வழக்கம்போல குளச்சல் பேருந்துநிலையத்தில் இருந்து வாணியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியபோது, துர்நாற்றம் வீசுவதாகக் கூறி அவரை பேருந்தில் இருந்து நடத்துநர் இறக்கிவிட்டுள்ளார். மீண்டும் நடந்து செல்ல வேண்டிய துயரத்தில் அந்த மூதாட்டி, பேருந்து நிலைய நிர்வாக அலுவலகம் முன் நியாயம் கேட்டு கதறி அழுதார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ”குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.