திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 35 லட்சம் வரை மோசடி செய்த பெண்ணிடமிருந்த பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் அருள்புரம் பகுதியில் வசித்து வந்தவர் தேவகி. இவர், அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் நன்றாக பழகி வந்ததை அடுத்து நம்பிக்கையின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அவரிடம் மாதச் சீட்டில் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் சீட்டு முடிந்து பல மாதங்களாகியும் தங்களுக்கு பணத்தை திருப்பித் தராததால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை பணத்தை திருப்பித் தராமல் கடந்த ஒருவார காலமாக தேவகி தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை எடுத்து தங்களுக்கான பணத்தை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.