இதுவோ கல்யாண சீசன். ஊரெங்கும் கெட்டி மேளம் கொட்ட ‘ஜாம் ஜாம்’ என கல்யாணம் நடைபெற்று வருகிறது. பல்வேறு தம்பதியர் தங்களது வாழ்வில் திருமண பந்தத்தின் மூலம் இணைந்து வருகின்றனர். அதனை அவர்கள் மட்டுமல்லாது அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
அப்படிப்பட்ட திருமண வரவேற்பு நிகழ்வு ஒன்று அண்மையில் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்வில் விருந்தினர்கள் உண்டது போக எஞ்சிய உணவுகளை தன் கையாலே உணவுக்காக ஏங்கி நிற்கும் மக்களுக்கு வழங்கியுள்ளார் மணமகனின் சகோதரி பாபியா கர்.
நள்ளிரவு ஒரு மணி அளவில் அந்த மாநிலத்தில் உள்ள ரணகாட் ரயில் நிலையத்திற்கு அருகே தங்கியிருந்த வறியவர்களுக்கு திருமண விருந்து கொடுத்துள்ளார் அவர். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய ‘யூஸ் அண்ட் த்ரோ’ தட்டில் அனைவருக்கும் உணவை விநியோகம் செய்துள்ளார் அவர்.
View this post on Instagram
அதை எதேச்சையாக கவனித்த நிலஞ்சன் மொண்டல் என்ற திருமண நிகழ்வுகளை படம் பிடிக்கும் புகைப்படக் கலைஞர், அவரது செயலை தனது கேமரா லென்ஸ் வழியாக படம் பிடித்து சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சகோதரி பாபியாவின் செயல் சமூக வலைதள பயனர்களின் மனங்களை வென்றுள்ளது. அதனால் அவரது படத்திற்கு லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றன.