தென்னாப்ரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த நபருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு அளித்த ஆய்வகம் மீது விசாரணை நடத்தப்படும் என கர்நாடகா அமைச்சர் அசோகா தெரிவித்துள்ளார்.
தென்னாப்ரிக்காவிலிருந்து துபாய் வழியாக கடந்த 20ஆம் தேதி பெங்களூரு வந்த நபருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்ததையடுத்து, அப்போது ஒமைக்ரான் பற்றிய தகவல் வெளிவராத நிலையில் அவர் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். பின்னர் அவரது மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதனிடையே, பாதிக்கப்பட்ட நபர் கடந்த 23ஆம் தேதி தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்தததையடுத்து, 27ஆம் தேதி அந்த சான்றைக் காட்டி மீண்டும் அவர் துபாய் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், சோதனைக்கு அனுப்பப்பட்டிருந்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவருக்கு ஒமைக்ரான் கொரோனா இருப்பது டிசம்பர் 2ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா அமைச்சர் அசோகா, ஒமைக்ரான் பாதிப்புடன் துபாய் புறப்பட்டு சென்ற நபரிடம் முன்கூட்டியே நடத்தப்பட்ட பரிசோதனையில் பாசிட்டிவ், நெகட்டிவ் என இருவேறு முடிவுகள் வந்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். அவருக்கு நெகட்டிவ் என சான்றிதழ் கொடுத்த ஆய்வகத்தின் மீது விசாரணை நடத்தப்படும் என்றும் கர்நாடகா அமைச்சர் அசோகா தெரிவித்துள்ளார்.