கடுமையான டிராஃபிக்கில் மாட்டாமல் சட்டுபுட்டுனு வீட்டுக்குப் போகணும்னா ஒண்ணு – மெட்ரோ ரயில் மாதிரி தனிப்பாதை இருக்கணும்; இல்லேனாலும் அந்த கார் ஆகாயத்தில் பறக்கணும். அப்படி வானத்தில் பறக்கும் ஒரு காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரெனோ நிறுவனம்.
TheArsenale எனும் நிறுவனத்துடன் இணைந்து ரெனோ அறிமுகப்படுத்தி உள்ள அந்த காரின் பெயர் – AIR4. இப்போதைக்கு இது கான்செப்ட் கார்தான். இன்னும் ஆகாயத்துக்கு வரவில்லை.“வரும் காலத்தில் கார்களை ஓட்டுவதற்கு சாலைகள் தேவையில்லை, ஏனென்றால் நமது கார்கள் பறந்து கொண்டிருக்கும்’’ என்று பெருமையுடன் கூறுகிறது ரெனோ.
30 ஆண்டுகளுக்கும் மேலாக 100 நாடுகளில் 8 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்களை விற்ற Renault 4L-ன் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஒரு வருடமாக பல கொண்டாட்டங்களை நடத்தி வந்த ரெனோ, இறுதியாக 4L காரின் டிசைனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட AIR4 பறக்கும் காரை அறிமுகப்படுத்தி, கொண்டாட்டத்தின் உச்சத்தை அடைந்துள்ளது.
4L காரின் உண்மையான பெயர் ரெனோ4. இது 1961-ம் ஆண்டு விற்பனைக்கு வந்த ஒரு சிறிய எளிமையான பட்ஜெட் கார். ரெனோ குழுமத்தின் முன்னாள் தலைவரான Pierre Dreyfus இதை விவரிக்கப் பயன்படுத்திய வார்த்தை “புளூ ஜீன்ஸ் கார்”. 1960-களில் சாமான்ய மக்களுக்கும் கார் வாங்கும் ஆசையை நிறைவேற்றிய பெருமை இந்த காருக்கு உள்ளது.
AIR4 முழுவதுமாக பிரான்ஸ் நாட்டில் டிசைன் செய்யப்பட்டு, அசெம்பிள் செய்யப்பட்டது. முற்றிலும் கார்பன்-ஃபைபரால் உருவாக்கப்பட்ட இந்த காரில் சக்கரங்கள் இல்லை. அதற்குப் பதிலாக, ஒவ்வொரு மூலையிலும் நான்கு இரண்டு-பிளேடு ப்ரொப்பல்லர்களைப் பொருத்தியுள்ளது ரெனோ. ரெனோ4-ன் பாடி ஷெல்லைத் தூக்குவதன் மூலம் ஓட்டுநர் கேபினில் அமரலாம். 90,000 mAh திறன் கொண்ட 22,000 mAh லித்தியம் பாலிமர் பேட்டரிகளால் இயக்கப்படுகிறது இது. மணிக்கு 93.6 கிமீ வேகம் மற்றும் 700 மீட்டர் உயரம் வரை பறக்கும்படி இதை வடிவமைத்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டு இறுதி வரை பாரிஸில் உள்ள ‘Atelier Renault on the Champs Elysées’ என்ற இடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ரெனோ4 உடன் சேர்த்து AIR4 காரையும் பொதுமக்கள் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். 2022-ம் ஆண்டு மக்காவ், மியாமி மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களிலும் இது காட்சிக்கு வைக்கப்படும்.
எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிடும் கார் கம்பெனிகள், பறக்கும் கார்கள் மீதும் ஒரு கண் வைத்திருக்கிறது. “வானம் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா?”என யாரும் உரிமை கொண்டாடாமல் இருந்தா சரி!