கோவை நவக்கரை அருகே ரயில் மோதி நான்கு யானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பரவலாக ரயில் விபத்து, மின்வேலி, வேட்டையாடுதல் போன்ற பல்வேறு காரணங்களால் யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன.
Also Read: மின்சாரம் தாக்கி உயிரிழந்த குட்டி; தட்டி எழுப்ப முயற்சி செய்த தாய் யானை; உருகவைத்த வீடியோ!
இந்நிலையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பல்வேறு காரணங்களால் கொல்லப்பட்ட யானைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சகத்திடம் கேட்டார்.
அதன்படி 2020-ம் ஆண்டு டிசம்பர் 31 தேதி வரை கடந்த 10 ஆண்டுகளில் 186 யானைகள் ரயில் மோதி இறந்துள்ளன. அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் 62 யானைகள் இறந்துள்ளன. தமிழ்நாட்டில் 5 யானைகள் இறந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி 741 யானைகள் இறந்துள்ளன. அதிகபட்சமாக ஒரிசா மாநிலத்தில் 133 யானைகள் இறந்துள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் 93 யானைகள் இறந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் வேட்டையாடப்பட்டு இறந்த யானைகளின் எண்ணிக்கை 169. ஒரிசா மாநிலத்தில் 49 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 9 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 64 யானைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் 32 யானைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 1 யானை விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளது. இப்படி நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் இயற்கைக்கு முரணான பல்வேறு காரணங்களால் மொத்தம் 1,160 யானைகள் இறந்துள்ளன.
Also Read: பள்ளத்தில் விழுந்து விபத்து; பலனளிக்காத சிகிச்சை; பரிதாபமாக உயிரிழந்த குட்டி யானை!
கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கீட்டின்படி இந்தியா முழுவதும் 29,964 யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 6,049 யானைகளும், அசாம் மாநிலத்தில் 5,719 யானைகளும், கேரளாவில் 5,706 யானைகளும், தமிழ்நாட்டில் 2,761 யானைகளும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் 14,612 யானைகள் உள்ளன. நாடு முழுவதும் யானைகளை பாதுகாப்பதற்காக, கடந்த 10 ஆண்டுகளில் ரூ.212.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பாண்டியராஜா கூறுகையில், “சமீப காலங்களில் யானைகளின் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. யானைகள் அழிந்தால் காடுகள் அழியும்.
காடுகள் அழிந்தால் மொத்த விலங்கினமும் மனித இனமும் அழிவுப் பாதைக்கு செல்லும். வருங்கால சந்ததியினருக்காக யானைகளையும் காடுகளை பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக துரிதமாக செயல்பட்டு இந்த யானைகள் அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.