பிரிட்டன் நாட்டில் உள்ள விவசாய நிலம் ஒன்றின் கீழ் புதைந்திருந்த பழமை வாய்ந்த ரோமானிய மாளிகையும் (வில்லா), மொசைக் ஒன்றையும் அடையாளம் கண்டுள்ளனர் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள். அங்குள்ள ருட்லாந்து (Rutland) பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் முதுமக்கள் விட்டுச்சென்ற எச்சம் இருந்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பொது முடக்கத்தின் போது அந்த விவசாய நிலத்தின் உரிமையாளரின் மகன் இதனை அடையாளம் கண்டுள்ளார். உடனடியாக இதுகுறித்த தகவலை அவர் உள்ளூரில் இருந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்ததும் அந்த இடத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் மூலம் 11×7 மீட்டர் அளவிலான மொசைக் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அதோடு அங்கு கிராமத்து கட்டமைப்பில் சிதிலமடைந்த மாளிகை ஒன்றையும் அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். எப்படியும் இது கி.பி. 3 மற்றும் 4-ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மொசைக்கில் கிரேக்க கதாநாயகனாக போற்றப்படும் அக்கீலியஸின் (Achilles) கதை இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.