பீகார் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் சுற்றுலா வழிகாட்டியான ராஜேஷை திருமணம் செய்து கொண்டுள்ளார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மேரி லோரி ஹெரல் என்ற பெண். அவர்களது திருமண நிகழ்வு படங்களை சமூக வலைதளம் மூலம் பார்த்து தெரிந்துக் கொண்ட நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இது வைரல் பேச்சாக மாறியுள்ளது.
பாரிஸ் நகரில் சொந்தமாக தொழில் செய்து வரும் மேரி, ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா வந்துள்ளார். அப்போது சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றி வந்த ராஜேஷ் உடன் காதல் ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் மாவட்டத்தின் கதாரியா (Katharia) கிராமத்தை சேர்ந்தவர் அவர். இருவரும் சந்தித்த போது ராஜேஷ் டெல்லியில் வசித்துள்ளார்.
சுற்றுலா பயணத்தை முடித்துக் கொண்டு பிரான்ஸ் திரும்பிய பிறகும் மேரி, ராஜேஷ் உடன் பேசி வந்துள்ளார். மூன்று வருடத்திற்கு பிறகு தன்னுடன் பாரிஸ் வந்து இருக்குமாறு சொல்லியுள்ளார் மேரி. அதன்படி பிரான்ஸ் பறந்த ராஜேஷ், மேரி உடன் இணைந்து தொழில் செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில்தான், பிரான்ஸ் நாட்டில் இருந்து தன் குடும்பத்துடன் வந்த மேரி, ராஜேஷை பீகாரில் இந்திய வழக்கப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன் மூலம் மணமக்கள் இருவரும் தங்கள் இல்வாழ்க்கையை இனிதே தொடங்கி உள்ளனர்.