கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகிலிருக்கும் நயினார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். கிருஷ்ணனுக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை அவரின் மகன்களான ஜெயராமன், ஏழுமலை, நல்லத்தம்பி ஆகிய மூவரும் முறையாக பாகப்பிரிவினை செய்து கொண்டனர். இந்த நிலையில், அந்த நிலத்துக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக கிருஷ்ணனின் மகன்கள் இணைய வழியில் பதிவு செய்திருக்கின்றனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், கிருஷ்ணனின் மகன் ஜெயராமன் சின்னசேலம் தாலுகா அலுவலகத்துக்கு நேரில் சென்று சர்வேயர் சூர்யாவை சந்தித்து, ‘சகோதரர்கள் நாங்கள் மூவரும் எங்கள் பூர்வீக நிலத்தை பிரித்துக்கொண்டோம். அதனை முறையாக அளந்து பட்டா மாற்றம் செய்து தரவேண்டும்’ என்று மனு கொடுத்திருக்கிறார்.
Also Read: கள்ளக்குறிச்சி: `வழிப்பறி கொள்ளையில் சிக்கிய எஸ்.ஐ மகன்!’ – கைது செய்து நடவடிக்கை எடுத்த எஸ்.பி
அதற்கு, சர்வேயர் சூர்யாவோ,“நிலத்தை அளந்து தர வேண்டும் என்றால், நபர் ஒருவருக்கு 8000 வீதம் மொத்தம் ரூ.24,000 தர வேண்டும்” என ஜெயராமனிடம் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயராமன், லஞ்சம் தர விரும்பாமல் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருக்கிறார். புகாரை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை (ரூ.24000) ஜெயராமனிடம் கொடுத்து அனுப்பியிருக்கின்றனர். நேற்று (24.11.2021) மாலை சுமார் 5 மணியளவில், சர்வேயர் சூர்யாவை சந்தித்து 24,000 ரூபாயை ஜெயராமன் கொடுத்திருக்கிறார்.அதை, சர்வேயர் சூர்யாவும், கிராம உதவியாளர் சுசீலா என்பவரும் இணைந்து வாங்கியிருக்கின்றனர்.
அப்போது, மறைந்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்புதுறை காவல்துறையினர், இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
இது தொடர்பாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “நேற்று (24.11.2021) மாலை 5 மணியளவில் அந்த இருவரையும் கையும் களவுமாக கைது செய்து, வழக்கு பதிவு செய்தோம். அதைத் தொடர்ந்து சின்னசேலம் தாலுகா அலுவலகம் சென்று அந்த ஆவணங்களை பெற்றுவந்தோம். இன்று காலை 7 மணியளவில் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் பெண்கள் சிறையில் அடைத்தோம்” என்றார்.
Also Read: லஞ்சம்: `வாரிசுச் சான்றிதழுக்கு ரூ.2,000; பட்டா மாற்ற ரூ.20,000’ – அடுத்தடுத்து சிக்கிய வி.ஏ.ஓ-க்கள்