கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைசந்தல் கிராமத்தை சேர்ந்த குமரன் என்பவரின் மகள் ரேஷ்மா (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டிருக்கிறது). ரேஷ்மா அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த நவம்பர் 20-ம்தேதி மாலை சுமார் 7 மணியளவில் கடைக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற ரேஷ்மா வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதனால் அவரின் பெற்றோர் கச்சிராயபாளையம் போலீஸில் 21-ம் தேதி புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் மாயமான ரேஷ்மாவை தேடி வந்தனர். இதற்கிடையே நேற்று கள்ளக்குறிச்சியை அடுத்த சோமண்டார்குடி பகுதியில் கோமுகி ஆற்றின் கரையோரமாக இளம்பெண்ணின் சடலமும், அதற்கு அருகில் வேப்ப மரத்தில் இளைஞர் ஒருவர் சடலமாக தூக்கில் தொங்குவதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்லால், கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராஜலட்சுமி, கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரதி, ஆனந்தராஜ் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் ஆற்றில் சடலமாக மிதந்த உடல் மாயமான மாணவி ரேஷ்மா என்பது தெரியவந்தது. அதேபோல வேப்பமரத்தில் தூக்கில் தொங்கியவர் குதிரைச்சந்தில் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகன் சுரேஷ்குமார் (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டிருக்கின்றன) என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் இருவரும் அந்த பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. அதையடுத்து இரண்டு சடலங்களையும் மீட்ட போலீஸார் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்துபோன மாணவியின் தாய் மற்றும் இறந்துபோன மாணவனின் தாத்தா ஆகியோரிடம் புகாரை பெற்று கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முதல்கட்ட விசாரணை குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், “உயிரிழந்த இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்து வந்திருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது. வெவ்வேறு சமூகம் என்பதால் தங்கள் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்களா என்ற குழப்பத்தில் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.
Also Read: சீர்காழி: கொலையா… தற்கொலையா?; தூக்கில் தொங்கிய சடலம்! – 10 மணி நேரம் நடந்த போராட்டம்
உயிரிழந்த மாணவர் சுரேஷ்குமார் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது சக மாணவர் ஒருவரிடம் காதல் விவகாரத்தால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில்தான் இந்த சம்பவம் நடைப்பெற்றிருக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் உண்மையான காரணம் தெரியவரும்” என்றார்.