“எனது வீட்டைச் சுற்றிலும் மழை நீர்; உங்களை பார்க்க நீந்தி வந்துள்ளேன்” என பூந்தமல்லியில் நடைபெற்ற நிவாரண உதவிகள் வழங்கும் விழாவில் சசிகலா பேசினார்.
பூந்தமல்லி நகர அமமுக சார்பில் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோரிமேடு பகுதியில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட சசிகலா, 2000 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசும்போது, “வெள்ள பாதிப்பு குறித்து கேள்விபட்டு பார்க்க வந்திருக்கிறேன். சென்னையில் வெள்ள பாதிப்பு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன். என் வீட்டை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது; அதையும் தாண்டி நீந்திதான் இங்கு வந்துள்ளேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியதை காப்பாற்ற என்னால் முடிந்ததை உங்களுக்கு செய்வேன்” என பேசினார்.