அமெரிக்காவில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் புகுந்த கார் மோதி 5 பேர் உயிரிழந்திருக்கிருக்கின்றனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் விஸ்கான்சின் (Wisconsin) மாகாணத்திலுள்ள மில்வௌகீ (Milwaukee) நகரத்தில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நேற்று ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த நிலையில், யாரும் எதிர்பாராதபடி, சிவப்பு நிற எஸ்.யு.வி கார் ஒன்று கூட்டத்துக்குள் வேகமாகப் புகுந்து மோதியது.
இதில், குழந்தைகள், பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மோதிவிட்டு நிற்காமல் சென்ற மர்மக் காரை, சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு நிறுத்தினர். மேலும், ஆம்புலன்ஸ் மூலம் விபத்துக்குள்ளானவர்களை உடனடியாக மீட்டு, அருகிலிருக்கும் மருத்துமனையிலும் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய மில்வௌகீ காவல்துறை ஆய்வாளர் தாம்ப்சன் (Thompson), “இந்த சம்பவம் தொடர்பாக, காரை ஓட்டிவந்தவரைப் பிடித்து விசாரித்து வருகிறோம். எஸ்.யு.வி காரையும் பறிமுதல் செய்திருக்கிறோம். இந்த சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாதிகளின் சதிச்செயல்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்” என தெரிவித்திருக்கிறார்.
Also Read: அமெரிக்கா: கேசினோ விளையாட்டில் 10,000 டாலர்! – இந்திய வம்சாவளிக்கு நேர்ந்த கொடூரம்!