உலகம் முழுவதும் புவி வெப்பமடைந்து வருவது குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் மோட்டார் வாகனங்கள் வெளியேற்றும் கார்பன் இதற்கு முக்கியக் காரணம் என சொல்லப்பட்டு வருகிறது. அதனால் பூமிக்கு மாசு கொடுக்காத வகையில் கார்பன் புகையை அறவே வெளியிடாத மின்சார வாகன பயன்பாடு உலகெங்கிலும் அதிகரித்து வருகிறது. இந்தியாவும் இப்போது மின்சார வாகன பயன்பாட்டுக்கு மெல்ல மாறி வருகிறது.
இந்த நிலையில் நார்வே நாட்டில் ‘Yara Birkeland’ என்ற உலகின் முதல் எலெக்ட்ரிக் மற்றும் தானியங்கி கப்பல் கட்டமைக்கப்பட்டு, முதல் வெள்ளோட்டமும் பார்க்கப்பட்டுள்ளது. உலகலாவில் பிரசித்தி பெற்ற நார்வே நாட்டு நிறுவனமான YARA இந்த கப்பலை KONGSBERG என்ற தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்துள்ளது.
டீசலில் இயங்கும் கப்பல்கள் மேற்கொள்கின்ற பயணத்தை பெருமளவில் குறைக்கும் நோக்கில் இந்த கப்பல் கட்டமைக்கப்பட்டுள்ளது. வரும் 2022 முதல் பயன்பாட்டுக்கு வர உள்ள இந்த கப்பல் Horten நகரில் இருந்து Oslo நகருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெற்றிகரமாக தனது முதல் பயணத்தை முடித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த கப்பல் தானியங்கு முறையில் தான் இயங்குகிறது என்பதற்கான முயற்சிகளை மேற்கோள் உள்ளதாக YARA தெரிவித்துள்ளது. இந்த கப்பல் அதிகபட்சமாக மணிக்கு 27.78 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.