சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒன்றரை மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்து 78 டாலரை தொட்டுள்ளது
கச்சா எண்ணெய் விலை இந்தாண்டு தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து உயர்ந்து பீப்பாய்க்கு 85 டாலர் வரை தொட்டது. கொரோனா பொதுமுடக்கத்திலிருந்து பெரும்பாலான நாடுகள் வெளியே வரத் தொடங்கிவிட்ட நிலையில் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்ததே விலை உயர காரணமாக கூறப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை நேற்றைய நிலவரப்படி பீப்பாய்க்கு 78 டாலராக குறைந்துள்ளது. கடந்த 6 வாரங்களில் இல்லாத குறைந்த விலையாகும்.
மேற்கத்திய நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பொது முடக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா தேசிய பொது முடக்கத்தை மீண்டும் அறிவித்துள்ளது. பல நாடுகளில் பொது முடக்கம் மீண்டும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில் கச்சா எண்ணெய் தேவை குறையும் என்பதால் அதன் விலையும் குறையத் தொடங்கியுள்ளது. சீனா தன் வசம் உள்ள உபரி கையிருப்பை சந்தையில் விடுவிக்க அமெரிக்கா கோரியுள்ளதும் கச்சா எண்ணெய் விலை குறைய மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனைப்படிக்க…நேற்று பெய்த கன மழையில் ஒரே நாளில் 100 ஏரிகள் நிரம்பின