தமிழகத்தில் 1 – 8 வகுப்புக்கான பள்ளிகள் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. காலையிலிருந்து மாலை வரை வழக்கம்போல் முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும் என்றபோதிலும், சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது. அதாவது, திங்கள்கிழமை ஒரு வகுப்பிற்கு பாடம் நடத்தப்பட்டால், செவ்வாய்கிழமை அந்த வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை. மீண்டும் புதன்கிழமை அவர்கள் வரவேண்டும்.
எந்த வகுப்பினரை எந்த நாட்களில் வர வைக்க வேண்டும் என்பதை அந்தந்த பள்ளி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம் என்றும், ஒரு வகுப்பறையில் 20 மாணவ, மாணவிகள் மட்டுமே இருக்கும் வகையில் தனிமனித இடைவெளியுடன் அமர வைக்கப்பட வேண்டும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
image
இவை அனைத்து அறிவிப்புகளுக்கும் அடுத்தபடியாக, “மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டியதில்லை. பெற்றோர் விருப்பத்தின் அடிப்படையில் அனுப்பலாம். ஆன்லைன் வழியில் கல்வி தேவைப்படுவோர் தொடர்ந்து ஆன்லைனில் படிக்கலாம்” என்று அறிவித்துள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு, எப்படி பாடம் நடத்தப்படும் என்ற கேள்விக்கு ‘இல்லம் தேடி கல்வி’ திட்ட அறிமுகத்தை கூறியுள்ளார் அமைச்சர். 
அதென்ன இல்லம் தேடி கல்வி? 
‘இல்லத்துக்கே வந்து கல்வி கற்பது’ என்ற அடிப்படையில் இத்திட்டம் சொல்லப்படுகிறது. பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க தன்னார்வலர்கள் மூலம் நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், இத்திட்டத்தின்கீழ், மாணவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று வகுப்புகள் நடத்தப்படும் என இதற்கு விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.
இந்த இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் தொடங்கி கூட்டணி கட்சிகள் வரை பலருக்கும் பல அதிருப்திகள் உள்ளது இங்கே கவனிக்கத்தக்கது. திராவிடக் கட்சியின் தலைவர் கி.வீரமணி இத்திட்டம் குறித்து தெரிவிக்கையில், “இல்லம் தேடி கல்வித் திட்டம், ஆர்எஸ்எஸ்-ன் கொள்கையை மறைமுகமாக திணிப்பதுபோல் உள்ளது. தேசிய கல்விக் கொள்கை தெரிவிப்பதைத்தான் அப்படியே இந்த இல்லம் தேடி கல்வித்திட்டமும் செயல்படுத்துகிறது. அந்தக் கல்விக்கொள்கையை மாநில அரசு எதிர்க்கிறது. ஆனால் இல்லம் தேடி கல்வி நடைமுறைப்படுத்தப்படுகிறது” என்ற கருத்தை பதிவு செய்து, இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 
image
கி.வீரமணி போலவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனும் இத்திட்டத்தை எதிர்த்திருந்தார். அவர், “இத்திட்டம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வழியாக சங் பரிவார் கும்பல் ஊடுருவி பிஞ்சு மனங்களில் மதவெறி நஞ்சை விதைக்கும் நிலை ஏற்படும்” என தெரிவித்திருந்தார்.
இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கு, அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வருவதுதான் நம்மை அதில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்த வைக்கிறது. திருவண்ணாமலையை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் மகாலட்சுமி, இத்திட்டம் குறித்தும், இதை எதிர்ப்பதன் பின்னணி குறித்தும் நம்மிடையே விரிவாக பேசினார்.
“இல்லம் தேடிக் கல்வி என்பது, மாணவர்களை பள்ளிக்கு வராமல் இருக்க வைப்பது போன்றதொரு முயற்சி. கிட்டத்தட்ட ஹோம் ட்யூஷன் போல. ஹோம் ட்யூஷன் என்கையில், அது நிச்சயம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கானதாக அமையாது. மாறாக மேல்தட்டு மக்களுக்கானதாக அமையும்.
image
தேசிய கல்விக் கொள்கை முன்னிறுத்துவதை போலவே, இல்லம் தேடி கல்வி திட்டமும் கற்பிக்கப்படும் இடம் – விதத்தில் மாற்றம் வரவேண்டுமென பேசுகிறது. ஆனால் அது சரியல்ல. பள்ளிக்கூட கல்விதான், சமூகநீதிக்கான அடையாளம். அப்படி பள்ளிக்கூட கல்வி என்ன சொல்லித் தருகின்றது என சிலர் கேட்கலாம். ‘எல்லா தரப்பட்ட மாணவர்களும், ஒரே வகுப்பில் ஒரே போல அமரவைக்கப்பட வேண்டும்’ என்பதுதான் பள்ளிக்கூடம் கற்றுத்தரும் அடிப்படை சமூக நீதி. கல்வியென்பது எந்தக்காலத்திலும் சமூகநீதியையும் சம உரிமையையும் சொல்லிக்கொடுக்க வேண்டியது முக்கியம். ஆனால், இல்லம் தேடி கல்வி அப்படியா செய்கிறது? ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப கல்வி சொல்லிக் கொடுப்பதென்பது, வெறும் ஏட்டுக் கல்வியாகத்தான் அமையும். இப்படி இல்லம் தேடிச்சென்று கல்வி கற்பிக்கப்பட்டு வளரும் மாணவரால், வருங்காலத்தில் தன்னைவிட பொருளாதார ரீதியாக – சாதிய ரீதியாக – உரிமை ரீதியாக ஒடுக்கப்படும் மாணவரின் நிலையை புரிந்துக்கொள்ள முடியாது. அப்படி புரிந்துக்கொள்ளாத மாணவர்கள் சமூகத்துக்குள் வரும்போது, அது சமூக சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும்.
இதுவொரு பக்கமென்றால், இன்னொரு புறம் பள்ளிக்கூடத்தை நம்பியே உணவுத் தேவை அமையும் மாணவர்களின் பிரச்னை இன்னும் அதிகம். ஏற்கெனவே அவர்கள் இந்த கொரோனா காலத்தில் மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தில் இருக்கிறார்கள். அதன் விளைவாக, பல ஏழை மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறிவிட்டார்கள். இப்போது அந்த மாணவர்களெல்லாம் மீண்டும் பள்ளிக்கு வர வேண்டுமென்றால், அவர்களுக்கு இருக்கும் பொருளாதார நஷ்டத்தை தீர்க்க வேண்டிய சூழல் அரசுக்கு உள்ளது. பொருளாதார நஷ்டம் காரணமாக நலிவடைந்து கிடக்கும் அந்த மாணவர்களுக்கு, அவர்களின் பசியை ஆற்ற அரசு முனைய வேண்டும். 
அதுபோலவே பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கிடைக்கும் இலவச நாப்கின், முட்டையெல்லாம் அவர்களுக்கு முழுமையாக தரப்படவேண்டும். இவையெல்லாம் கிடைக்க, மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். அரசு சொல்வதுபோல, வீட்டிலேயே இருந்தால், அவர்களுக்கு இதெல்லாம் கிடைக்காமல் போய்விடும். அப்படி ஆகிவிட்டால், அவர்கள் இன்னும் இன்னும் நலிவடைவர்; அவதிப்படுவர்.
image
நான் இதை சொல்கையில், ‘ஏன் அந்த மாணவர்கள் பள்ளிக்கு வந்து வாங்கிக் கொள்ளட்டுமே. யார் அவர்களை தடுத்தது?’ என்று சிலர் கேட்கலாம். அப்படி கேட்பவர்கள், ஏழைகளின் வாழ்வியலும் அவர்களின் பொருளாதார சிக்கலையும் சற்று யோசிக்க வேண்டும். தன் குடும்பத்தின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய, மாணவர்கள் வேலைக்கு செல்லலாம் என நினைக்கின்றார்கள்.
அப்படியிருக்கையில், அவர்களிடம் சென்று ‘வீட்டுக்கே வந்து சொல்லிக் கொடுக்கிறோம்’ என்றால், அவர்கள் எண்ணம் ‘அதான் வீட்டுக்கே 2 மணி நேரம் வந்து சொல்லித்தருவாங்களே… நாம பகல்ல வேலைக்கு போய்ட்டு, சாயங்காலம் வீட்லயே படிச்சுக்குவோமே’ என்று போகக்கூடும். ஒரு நல்ல அரசு, இப்படியான எண்ணங்களை ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்கள் மத்தியிலேயே உருவாக அனுமதிக்கக் கூடாது. இந்த உயரிய நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் சத்துணவு திட்டம். இப்போதும் அது நடைமுறையில் உள்ளதென்றாலும்; இன்றைய மாணவர்களின் தேவை (கொரோனாவுக்குப் பின்) ‘மதிய உணவு வேண்டும்’ என்பதைத்தாண்டி உயர்ந்துள்ளது. 
ஆகவே, இந்த கொரோனா காலம் முடியும்வரை, அதாவது கொரோனா ஏற்படுத்திய தாக்கம் முடியும் வரை, ஏழை மாணவர்களுக்கென அரசு கூடுதல் நடவடிக்கைகளை கட்டுக்கோப்புடன் எவ்வித சமரசமுமின்றி எடுத்தேயாக வேண்டும். அந்த சமரசமற்ற கட்டுக்கோப்பான முன்னெடுப்பில் முக்கியமானது, ‘அனைவரும் பள்ளிக்கு வரத்தொடங்க வேண்டும்’ என்பது. ஒருவேளை பள்ளிக்கு வருவது இன்றளவுக்கு கட்டாயமில்லை என அரசு சொன்னாலும்கூட பரவாயில்லை; ஆன்லைன் கல்விக்கு தற்காலிகமாக சில வாரங்கள் வரை தொடர அனுமதிக்கலாம். ஆனால் அதுவும் சில வாரங்கள்தான். எவ்வளவு விரைந்து அவர்களை பள்ளிக்கு அழைக்கிறோமோ, அந்தளவுக்கு விரைவாக அவர்கள் பயன்பெறுவர்.
‘பள்ளிக்கு வந்தால் கொரோனா பரவல் ஏற்பட்டுவிடுமோ’ என்ற அச்சம் எங்களுக்குப் புரிகிறது. ஆனால் அது நிகழாமல் இருக்க எல்லா வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் அரசின் வழிகாட்டுதலுடன் செய்கிறோம். ஆகவே அரசு மாணவர்களை முழு வீச்சில் மாணவர்களை பள்ளி நோக்கி வரசொல்ல வேண்டும். 
இல்லம் தேடி கல்வியிலுள்ள மற்றொரு சிக்கல், இதில் இருக்கும் தன்னார்வலர்கள் பங்கு. இந்த தன்னார்வலர்களை அரசு என்ன அடிப்படையில் தேர்வு செய்யுமென தெரியவில்லை. குறைந்தபட்சமாக 12-ம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமென்பதுபோல சொல்லப்படுகிறது. ஆனால் அதுமட்டுமே ஒரு மாணவருக்கு அவனது கற்றல் இடைவெளியை குறைக்க உதவிடுமா என்ன? ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவர்களை வைத்தாவது, இந்த விஷயத்தை முன்னெடுக்கலாம். ஆனால் அப்படியும் செய்யாமல், உரிய கல்வித் தகுதி – ஆசிரியப் பயிற்சி இல்லாத ஒருவரை ஆசிரியரின் பணியை பார்க்க சொல்வது எப்படி சரியாக இருக்கும்?
image
ஏற்கெனவே இந்த ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் பலரும் மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுள்ளனர். இந்த இல்லம் தேடி கல்வியால், இன்னும் அவர்களை பின்னோக்கி அழைத்துச் சென்றுவிடும்” என்றார் ஆசிரியை மகாலட்சுமி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தொடங்கி, அரசுப் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி வரை இவர்கள் உணர்த்தும் ஒரு முக்கியமான விஷயம், ‘இப்படி உரிய பயிற்சி இல்லாமல் வருவோரில், ஏதேனும் அமைப்பு சார் கொள்கை ரீதியான கோட்பாடுகளுடன் செயல்படும் நபராக இருந்தால், அவர்கள் அதை மாணவர்களிடமும் பரப்பும் அபாயம் உள்ளது’. இதற்கு அரசின் பதிலென்ன என்பது தெரியவில்லை.
இதுவொரு புறமிருக்க, இந்தத் திட்டத்துக்காக இல்லம் தேடி கல்வி வழங்க 2 லட்சம் தன்னார்வலர்களை எதிர்பார்ப்பதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். அவர்களுக்கு மாதம் ரூ.1000 சம்பளம் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு முனைவர் பட்டம் முடித்த 450 பேர் உட்பட மொத்தம் ஒரு லட்சம் பேர் பதிவு செய்து இருக்கின்றனர் என்ற தகவல் ஞாயிறன்று வெளியாகினது. இவர்களில் முதுகலை பட்டதாரிகள் மற்றும் பட்டதாரிகள் 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் என தெரிவிக்கப்பட்டது. இது பட்டதாரிகளின் வேலையின்மையை காட்டுகிறதோ என்ற அச்சமும் எழுகிறது. 
உடன் இதில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயமாக, ‘குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் அத்துமீறல்’ குற்றச்சாடுகளை பார்க்க வேண்டியுள்ளது. ‘பள்ளி ஆசிரியர்களே இப்படியான குற்றச்சாட்டில் சிக்கிவரும் இந்த நேரத்தில், பிறரை எப்படி நம்புவது? எல்லோரையும் குறை கூற முடியாதுதான் என்றாலும், ஒருவேளை அந்நபர் அத்துமீறினால் அவரை எங்கு யாரிடம் புகார் கூறுவது? பள்ளியென்றால் தலைமை ஆசிரியர் இருப்பார், வகுப்பாசிரியர் இருப்பார்… இங்கு புகார் தெரிவிக்க யாரை அழைப்பது?’ என்பது போன்ற கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது.
image
இதற்கு பள்ளிக்கல்வித்துறை சார்பிலான ‘இல்லம் தேடிக் கல்வி’ விளக்க அறிக்கையின் வழியாக ஒரு பதிலை காணமுடிகிறது. அது, அரசுப்பள்ளி தலைமையாசிரியருக்கான சில பொறுப்புகள். அந்த அறிக்கையின் தகவலின்படி, தலைமையாசிரியர்கள் “தன்னார்வலர்கள் / இல்லம் தேடி கல்வி செயல்படும் மையங்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தங்களின் பள்ளிகளில் இருந்து வழங்கப்படுவைத உறுதி செய்ய வேண்டும்; அம்மையங்களின் செயல்பாடு மற்றும் குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து அங்கு பயிலும் மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்புகொள்ள வேண்டும்” என தெரியவருகிறது. ஆக, மாணவர்கள் – தலைமையாசிரியர்கள் பங்கு இங்கு முக்கியத்துவம் பெறுகிறதென்பது ஆரோக்கியமான விஷயம்.
போலவே முதல்வர் ஸ்டாலின் தனது ஒரு அறிக்கையில், “இல்லம் தேடி கல்வி திட்டம் தமிழக பள்ளிக்கல்வியை மேலும் மேம்படுத்தும். இந்த திட்டத்திற்கான தன்னார்வலர்களை தேர்வு செய்யும் முறையும், அவர்களது பங்களிப்பும் கல்வியாளர் குழுவால் கண்காணிக்கப்படும். அரசின் வழிகாட்டுதலை முறையாக கடைப்பிடிப்போர் மட்டுமே தன்னார்வலர்களாக தொடர அனுமதிக்கப்படுவர். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்ற பதிவு செய்துள்ள 86,550 பேரின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்படும்” என்று கூறியுள்ளார். இதுவும் கவனிக்கப்படவேண்டியதாக இருக்கிறது.
image
அரசின் இந்த அறிக்கையினை முழுமையாக பார்க்கும்போது, இந்த இல்லம் தேடிக் கல்வியென்பது, வீதிகள்தோறும் மையங்கள் நிறுவப்பட்டு அங்கு மாணவர்களை ஒன்றுதிரட்டி நடத்தப்படப்போகும் முயற்சி என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. மேலும் சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ‘இல்லம் தேடி கல்வி’ குறித்து வெளியிட்ட காணொலியில், ‘இதன்மூலம் மாணவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்றே கல்வி கற்பிக்கப்படும். மாணவர்கள் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய பின் 5 – 7 மணிக்கு வீட்டுக்கு அருகிலேயே ஒரு இடத்தில் சங்கமித்து அங்கு வரும் தன்னார்வலர்களை சந்தித்து கல்வி கற்கலாம். 20 மாணவர்களுக்கு ஒரு தன்னாவர்லர் நியமிக்கப்படுவர்’ என்று கூறியுள்ளார்.
அமைச்சர் சொல்வதுபோல பார்த்தால், இது ‘இல்லம் தேடி கல்வி’ அல்ல. ‘வீதிகள்தோறும் கல்வி’. அதுவும், பள்ளி செல்லாத மாணவர்களுக்கல்ல. பள்ளி செல்லும், அதேநேரம் கடந்த வருடங்களில் பாடம் சரியாக புரியாத மாணவர்களுக்கானது. ஏறத்தாழ இதுவும் பள்ளி போலத்தான். ஏனெனில், இங்கும் 20 மாணவர்களுக்கு – ஒரு இன்சார்ஜ். ஒரேயொரு வித்தியாசம், இன்சார்ஜ், ஆசிரியர் அல்ல; தன்னார்வலர். அவ்வளவே. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் கலந்துக்கொள்ளும் மாணவர்களுக்கு, அடிப்படை பாடத்தை எடுத்துக்கூறி கற்றல் இடைவெளியை குறைப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம் என்கிறார் அமைச்சர். எனில் இது ‘இல்லம் தேடி கல்வி’யா ‘வீதிகள்தோறும் கல்வி’யா? ஒருவேளை ‘விருப்பப்படும் மாணவர்களுக்கு மட்டும் இல்லம் தேடி கல்வி கற்றுக்கொடுக்கப்படும்; மற்றவருக்கு மையங்கள் மூலமாக சொல்லிக்கொடுப்போம் என்று இதை புரிந்துக்கொள்ள வேண்டுமா?’ என்பதிலும் சந்தேகம் உள்ளது. அரசு, இதையும் விளக்க வேண்டியுள்ளது.
இது ‘இல்லம் தேடி கல்வி’யா ‘வீதிகள்தோறும் கல்வி’யா? என்பதில் சந்தேகங்கள் உள்ள நிலையில், ஒருவேளை வீதிகள்தோறும் கல்வி என்றால், பல வயதுடைய – பல வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் வருவார்களே… அவர்கள் எல்லோருக்கும் அவரவர்களின் பாடத்தை தன்னார்வலர்கள் எப்படி கற்பிக்கப்போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு அரசின் குறிப்பேட்டில், அம்மாணவர்கள் வகுப்பு வாரியாக பிரிக்கப்படுவர் (1-5ம் வகுப்பு குழந்தைகள்; 6 – 8 வகுப்புடைய குழந்தைகளென) என சொல்லப்பட்டுள்ளது. இவர்களுக்கு அடிப்படை பாடம் மட்டுமே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அது எப்படி எல்லா வயதுடைய / வகுப்பை சேர்ந்த குழந்தைகளுக்கும் பொருந்தும்?
image
இதற்கான பதிலாக, ‘தனி பாடத்திட்டம் உருவாக்கப்படும். அதுவரை அடிப்படை கல்வி தரப்படும்’ என அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆகவே, இத்திட்டத்தை பள்ளிக்கல்வியோடு எந்தவகையிலும் தொடர்பு படுத்தவே முடியவில்லை. மாறாக கற்றல் இடைவெளி சார்ந்து மட்டுமே இது செயல்படுகிறது. எனில், இத்திட்டத்தின் மூலம் ‘பள்ளிக்கு வராத மாணவர்கள்’ எப்படி பயனடைவர்? இதைக்குறிப்பிட காரணம், இப்போது பள்ளிக்கு வருவது நிர்ப்பந்தமில்லை. எனில் பள்ளிக்கு வராமல் இருந்தால் அவர்கள் எப்படி அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெறமுடியும்? அவர்களுக்கு அரசு என்ன செய்யப்போகிறது? இத்திட்டமே 6 மாதத்துக்கேயான ஒரு திட்டம் என்கையில், பள்ளிக்கு வராத மாணவர்களை எப்படி அரசு கையாளப்போகிறது? அவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் என்ன?
இத்திட்டத்திற்கான செலவு மட்டும், ரூ.200 கோடி என அரசு சொல்லியுள்ளது. இவ்வளவு செலவு செய்து ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது, அதுசார்ந்து எழும்பும் ஆசிரியர்கள் – தன்னார்வலர்கள் – அரசியல் கட்சியினரின் மேற்குறிப்பிட்ட இந்த அடிப்படை கேள்விகள், விமர்சனங்களுக்கு அரசு பதிலளிப்பது அவசியம். செய்யுமா?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.