தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள குமாரகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் சூரிய ராகவன். இவர், எட்டயபுரத்தில் அரசு மருத்துவமனை அருகேயுள்ள தனது உறவினருக்குச் சொந்தமான டி.வி பழுது பார்க்கும் கடையில் பணிபுரிந்து வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்பு பழுது பார்ப்பதற்காக கொடுத்த எல்.இ.டி டி.வியை வாங்கிச் செல்வதற்காக எட்டயபுரம் அருகிலுள்ள சோழபுரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் சூரியராகவனின் கடைக்கு வந்திருக்கிறார்.
கடைக்குள் சென்ற ஆன்ந்தராஜ், சூரிய ராகவனைக் கீழே தள்ளி கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டுத் தப்பியோடினார். இதையடுத்து எட்டயபுரம் காவல் நிலையப் போலீஸார் தப்பியோடிய ஆனந்தராஜை மடக்கிப் பிடித்தனர். போலீஸாரின் விசாரணையில் தான் காதலித்து வந்த பெண்ணை சூரியராகவனும் காதலித்து வந்ததுடன் திருமணமும் செய்து கொண்ட ஆத்திரத்தில் கொலை செய்தது தெரிய வந்தது.
படுகொலை செய்யப்பட்ட சூரிய ராகவனுக்கும், படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பட்டதாரியான அப்பெண், சூரிய ராகவன் கடையின் அருகேயுள்ள டைப்பிஸ்ட் இன்ஸ்டியூட்டுக்கு வந்தபோது பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலானது. இந்த காதல் விவாகரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
Also Read: ஒரே பெண்ணிடம் பழகிய இரு நண்பர்கள்; பெண்ணின் கணவரிடம் காட்டிக்கொடுத்ததால் கொலை; என்ன நடந்தது?
இதற்கிடையில் பெற்றோர்களின் எதிர்ப்பினையும் மீறி சூரிய ராகவனும் அந்தப் பெண்ணும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். கொலைச் சம்பவம் குறித்து போலீஸாரிடம் ஆனந்தராஜ் அளித்த வாக்குமூலத்தில், ஆனந்தராஜ், சூரிய ராகவன் திருமணம் செய்த பெண்ணை ஒருதலையாகக் காதலித்திருக்கிறார். அந்தப் பெண் ஆனந்தராஜுடன் பேசியிருக்கிறார். திடீரென அந்தப் பெண் ஆனந்தராஜுடன் பேசுவதை நிறுத்தியதுடன், சூரிய ராகவனும், அந்தப் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
ஆனந்தராஜும் அந்தப் பெண்ணும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், சூரிய ராகவன் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்கள் காதலித்ததும், திருமணம் செய்ததும் ஆனந்தராஜுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சூரிய ராகவனின் கடைக்கு டி.வி பழுதுநீக்கக் கொடுத்து, அதை மீண்டும் வாங்கச் செல்லும்போது, “ நான் காதலிச்ச பெண்ணைநீ அபகரிச்சிட்ட” என ஆனந்தராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
பிறகு தான் கொண்டுவந்திருந்த மிளகாய்ப் பொடியை சூரிய ராகவனின் கண்ணில் தூவி, கத்தியால் தலையைக் தூண்டாக வெட்டிக் கொன்றிருக்கிறார் என போலீஸிடம் அளித்த வாக்குமூலத்தில் ஆனந்தராஜ் கூறியிருக்கிறார்.