திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ-வுமான தேவராஜியின் இளைய மருமகள் காயத்ரி பிரபாகரன், உள்ளாட்சித் தேர்தலில் ஆலங்காயம் ஒன்றியத்திலிருக்கும் ஏழாவது வார்டு கொத்தக்கோட்டை ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டார். எம்.எல்.ஏ-வின் மருமகள் என்பதால் மாவட்டத்திலேயே கொத்தக்கோட்டை வார்டு மட்டும் கூடுதல் கவனத்தைப் பெற்றிருந்தது. அதற்கேற்ப அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி கதிர் ஆனந்த் போன்றோரும் கொத்தக்கோட்டை வார்டில் அடிக்கடி பிரசாரம் செய்தனர்.
Also Read: `என் வெற்றி சுலபமானதாக இல்லை!’ – உள்ளாட்சித் தேர்தலில் வென்ற உமா சங்கர் ஐ.ஏ.எஸ்-ஸின் தங்கை
இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி ஆலங்காயம் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் எம்.எல்.ஏ தேவராஜி சென்று வந்ததாகப் பிரச்னையைக் கிளப்பி, அதிமுக-வினர் போராட்டம் செய்தனர். பிரச்னை ஏற்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் விசாரணை மேற்கொண்ட மாவட்டத் தேர்தல் பார்வையாளர் காமராஜ், `எந்தத் தவறும் நடைபெறவில்லை’ என்று விளக்கம் கொடுத்த பின்னரே விவகாரம் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், ஆலங்காயம் ஒன்றியத்தில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, எம்.எல்.ஏ-வின் மருமகள் போட்டியிட்ட வார்டு மீதே அனைவரின் கவனமும் இருந்தது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டிருந்த அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ஜெய்சங்கரை விடவும் 620 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். காயத்ரி பிரபாகரன் பெற்ற மொத்த வாக்குகள் 2,276.
Also Read: `அந்த 60 ஓட்டுகளுக்கு நன்றி!’ – உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட மூன்றடி உயர மாற்றுத்திறனாளி பெண்
“திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் நேர்மையான முறையில் நடந்து முடிந்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கட்சியினரின் தலையீடு இல்லை. என்றாலும் பெருவாரியான வெற்றியை தி.மு.க பெற்றிருக்கிறது. இந்த ஆட்சியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைத் தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன. வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் நான் சென்று வந்ததாகக் கூறப்பட்ட பொய்க்கும் மக்களே பதிலளித்துவிட்டனர். இதன் மூலம் அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரத்துக்கும் பாடம் புகட்டியிருக்கிறோம்’’ என்கிறார் எம்.எல்.ஏ தேவராஜி.