தமிழகத்தின் மின்தேவையை ஈடு செய்ய அனல் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில் தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியானது குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைப்பதால், அதனைக் கொண்டு தேவையை ஈடு செய்ய இயலாது. வட சென்னையில் 800 மெகா வாட் திறனுடன் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் உற்பத்தியைத் தொடங்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். உடன்குடி அனல்மின் நிலையத்தில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரு அலகுகளை அமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
உப்பூர், எண்ணூரில் அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அரசிடம் எடுத்துரைத்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். அனல்மின் நிலையங்களில் மூன்று ரூபாய் முதல் மூன்றரை ரூபாய் வரை ஒரு யூனிட் மின்சாரத்தைத் தயாரிக்க இயலும் என்றும், அதே வேளையில் தனியாரிடம் இருந்து மின்சாரத்தைப் பெறும் போது ஒரு யூனிட்டிற்கு 4 ரூபாய் முதல் நான்கரை ரூபாய் வரை வழங்க வேண்டும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் கூறினர். நிலக்கரி தட்டுப்பாடு பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு நெய்வேலியில் கிடைக்கும் லிக்னைட் உதவுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.