திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (30). இவரின் மனைவி பெயர் மாரியம்மாள் (25). இந்த தம்பதிக்கு ரித்தீஷ் (6) , ராகேஷ் (4) என இரண்டு மகன்கள் இருந்தனர். கூலித் தொழிலாளியான கணேசன் சரி வர வேலைக்குச் செல்லாமல் மது அருந்தி விட்டு, வீட்டில் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுக் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, மாரியம்மாள் 2 குழந்தைகளையும் கணேசனிடத்தில் விட்டு விட்டு, ஊத்துக்கோட்டையை அடுத்த வடமதுரையில் உள்ள தனது அக்கா வீட்டிற்குச் சென்று அங்கேயே தங்கி விட்டார்.
கணவன் மனைவி இருவருக்கும் இடையேயான விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்ததை அடுத்து, மாரியம்மாள் கணேசனிடம் உள்ள 2 குழந்தைகளையும் தன்னிடம் மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகார் மனுவினை பெற்றுக் கொண்ட மகளிர் போலீஸார், கணேசனை வரும் 14-ம் தேதி காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளனர். மாரியம்மாள் போலீஸாரிடம் முறையிட்டதை அடுத்து, குழந்தைகளை தன்னிடத்தில் இருந்து பிரித்து விடுவார்களோ என்று பயத்தில் கணேசன் பித்துப் பிடித்தவர் திரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றைய தினம் கணேசன் கொள்ளுமேடு பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து 2 குழந்தைகளுடன் திடீரென மாயமாகி இருக்கிறார். கணேசன் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த கணேசனின் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியிருக்கின்றனர். ஆனால், எங்குத் தேடியும் கிடைக்காத நிலையில், அவரின் சகோதரி அனுராதா ஆவடி டேங்க் ஃபேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து, போலீஸார் மாயமான கணேசனைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
Also Read: `என் மகள் தற்கொலை பண்ண வாய்ப்பே இல்ல!’ – வரதட்சணைக் கொடுமைக்கு பலியானாரா இளம்பெண்?
இந்நிலையில், நேற்று காலை சுமார் 11.30 மணியளவில் ஆவடியை அடுத்த வெள்ளனூர் ஏரியில் 2 குழந்தைகளின் உடல்கள் மிதந்து கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, விசாரணை மேற்கொண்டனர். கணேசனின் சகோதரி அனுராதா அளித்த தகவல்களின் பேரில் ஏரியில் செத்து மிதந்தது கணேசனின் குழந்தைகள் என்பதை உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து, கணேசனைத் தீவிரமாகத் தேதி வந்தனர். அப்போது, ஏரிக்கரை அருகே புதரில் கணேசன் கை நரம்புகளை அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீஸார், உடனடியாக ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி டேங்க் ஃபேக்டரி போலீஸார் கூறுகையில், “மனைவியுடனான குடும்ப பிரச்னையின் காரணமாக விரக்தியிலிருந்து வந்த கணேசன், தனது 2 குழந்தைகளையும் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்வதென முடிவெடுத்திருக்கிறார். அதன்படி, வெள்ளானூர் ஏரிக்குக் குழந்தைகளுடன் சென்றவர், முதலில் அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக நீரில் மூழ்கடித்து கொலை செய்திருக்கிறார். அதையடுத்து, தன்னுடைய கை நரம்புகளையும் பலமாக வெட்டிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ஆனால், ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த கணேசனைத் துரிதமாகச் செயல்பட்டு மீட்டு, மருத்துவமனையில்அனுமதித்து விட்டோம். கனேசனுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தன்னுடைய மனைவி, தன் குழந்தைகளை தன்னிடமிருந்து பிரித்து விடுவாரோ என்ற அச்சத்தில் கணேசன் இந்த விபரீத முடிவெடுத்திருக்கிறார்” என்றனர்.
குடும்ப பிரச்னை காரணமாக 2 குழந்தைகளைக் கொன்று விட்டு, தற்கொலைக்கு முயன்ற தந்தையின் செயல் அப்பகுதி மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.