தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த மதிமுக நிர்வாகி எரிமலை வரதன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில், எரிமலை வரதனின் இல்லத்திற்கு இன்று சென்ற மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ, அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம், ”துரை வையாபுரி அரசியலுக்கு வருவாரா?” என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “துரை வையாபுரி, கடந்த இரண்டு ஆண்டு காலமாக எனக்கே தெரியாமல் மதிமுக கட்சிக்காரர்கள் இலங்களின் சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சிகளுக்குச் சென்று வந்தார். கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு உடல்நலக்குறைவு என தகவல் கேட்டாலும், சிகிச்சைக்குத் தேவையான உதவியைச் செய்து வந்துள்ளார். கட்சியினரின் இல்ல திருமண நிகழ்ச்சிகளில் துரை வையாபுரின் படத்தைப் போடக்கூடாது. அவர் படம் பொறிக்கபட்ட சுவரொட்டிகளை ஒட்டக்கூடாது என நிர்வாகிகளிடம் சொன்னேன். கட்சியின் மாநாட்டுப் பந்தலிலும் அவர் படம் போடக்கூடாது எனச் சொன்னேன்.
Also Read: துரை வையாபுரி டு துரை வைகோ… வாரிசு அரசியலை வழிமொழிகிறாரா வைகோ?
அதை மீறி படம் போடப்பட்டிருந்த பேனர்களை அகற்றவும் சொல்லி இருக்கிறேன். தொடர்ந்து இதே செயலில் நிர்வாகிகள் ஈடுபட்டால் கட்சியை விட்டு நீக்கவும் தயங்க மாட்டேன் என கண்டிப்புடன் கூறினேன். சில குடும்பங்களில் வாரிசுகளை அரசியலில் புகுத்துகின்றனர். சிலர் அவர்களை கொண்டு வரவேண்டும் என்று அரசியலில் திட்டமிட்டு செய்கிறார்கள். நான் அவரை ஊக்குவிக்கவில்லை. அதே நேரத்தில் அவர் அரசியலுக்கு வந்து விடக்கூடாது என, தடுப்பதற்கு என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சித்துப் பார்த்தேன். அதையும் மீறி தற்போது காரியங்கள் நடக்கின்றன.
’எங்களுக்கு வழிகாட்ட நல்ல ஒரு வழிகாட்டி வேண்டும். அதற்கு எல்லாத் தகுதியும் துரை வையாபுரியிடம் இருக்கிறது’ எனச் சொல்லி என்னையே மீறி தொண்டர்கள் அழைத்துக் கொண்டு போகின்றனர். இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. தொண்டர்களின் விருப்பம் எதுவோ அது ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும்” என்றவரிடம், ”ஜனநாயக முறைப்படி கட்சியில் துரை வையாபுரி தேர்ந்தெடுக்கப்படுவாரா?” என்ற கேள்விக்கு பதிலளித்த வைகோ, ”யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. அதை நிராகரிக்கவும் முடியாது” எனக் கூறினார்.