திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ-வுமான தேவராஜி கட்சிக்கொடி பொருத்தப்பட்டிருந்த தனது காரில், ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் நேற்று சென்றுவந்ததாகக் கூறப்படுகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் தேவராஜி பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகளைப் பிரித்துப் பார்த்ததாகவும், அதில் சில வாக்குப்பெட்டிகளை எடுத்துச்சென்று திரும்பக் கொண்டுவந்து வைத்ததாகவும் குற்றம்சாட்டிய அதிமுக-வினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதற்கு பதிலளித்த, தி.மு.க எம்.எல்.ஏ தேவராஜி, ‘‘தவறான தகவல்களைப் பரப்பிவருகிறார்கள். தோல்வி பயத்தில் உளறிக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியும், வாணியம்பாடி அ.தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்குமாரும் குவார்ட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்து போராட்டத்தைத் தூண்டிவிட்டிருக்கிறார்கள். வாக்குச்சீட்டுகளை எந்த மடையனாவது பகலில் மாற்றுவானா? பி.டி.ஓ-வை சஸ்பெண்ட் செய்தால் என் தலையா உருளப்போகிறது?’’ என்றார்.
தேவராஜியின் இந்த விளக்கம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணியிடம் கருத்து கேட்டோம். ‘‘வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் எம்.எல்.ஏ போகக்கூடாது என்று விதிமுறை இருக்கின்றன. அப்படியிருக்கும்போது, 20 பேருடன் தேவராஜி உள்ளே சென்றிருக்கிறார் என்பதால் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விதிமுறைகளை மீறும் இவர்களால் என்ன நியாயம் கிடைக்கப் போகிறது. எங்கள் ஆட்சியில், இதுபோன்ற அராஜகத்தை பண்ணியிருக்கின்றோமா? அதிலும் தேவராஜியின் தொகுதியே இது கிடையாது. வாக்குச்சாவடி மையத்திலிருந்து வாக்குப்பெட்டிகளை கோணிப்பையில் போட்டு எடுத்துவந்து வைத்துள்ளனர். எதிர்க்கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் எனப் பலரும் இருக்கும்போது, ஆளும் கட்சி எம்எல்ஏ-வான தேவராஜி ஒரே ஆள் மட்டும் சென்று பார்க்கிறார். இதுதொடர்பாக, அதிகாரிகள்மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நேற்று இரவே தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துவிட்டேன். இதுவரை யார்மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியரையும் சந்திக்க நேரம் கேட்டிருக்கின்றேன். மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வலியுறுத்த உள்ளேன். எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக எங்கள் கட்சியினர் மதுபோதையில் இருந்ததாக அவர் சொல்லியிருக்கிறார்’’ என்றார் கே.சி.வீரமணி.