”நல்ல பாட்டை மட்டுமே எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் என் ஊர்க்காரர் – உடன்பிறப்பு என தலைவர் கலைஞரால் புகழப்பட்டவர்” என்று கவிஞர் பிறைசூடன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவருடன், ஜிகே வாசன், திரைத்துறையைச் சேர்ந்த மனோ பாலா, லியோனி உள்ளிட்டோர்கள் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.
முதல்வர் மு.க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், ”நல்ல பாட்டை மட்டுமே எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் என் ஊர்க்காரர் – உடன்பிறப்பு என தலைவர் கலைஞரால் புகழப்பட்டவர்; திருவாரூர் மண்ணிலிருந்து புறப்பட்டுத் திரையிசையில் தனக்கெனத் தனியிடம் பிடித்த கவிஞர் கலைமாமணி பிறைசூடன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், இரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
பிறைசூடன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியப்பின் நடிகர் மனோபாலா,
”இலக்கியத்தை மிக எளிய பாடலாக கொடுக்கக்கூடியது வல்லவர் பிறைசூடன். ஏழை தயாரிப்பாளர்களின் முதன்மை பாடல் ஆசிரியராக இருந்தவர். கேப்டன் பிரபாகரன் படத்தில் இடம்பெற்ற ஆட்டமா தேரோட்டமா பாடலை 5 நிமிடத்தில் எழுதிக் கொடுத்தார். ஒரு மணி நேரத்தில் அந்த பாடல் பதிவு செய்யப்பட்டது. பிறைசூடன் மறைவு பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
பிறைசூடன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய லியோனி,
”நெற்றியில் திருநீர் பூசி இருந்தாலும் அனைத்து மதத்திற்கும் ஒன்றாக மதித்தவர் பிறைசூடன்.மிக எளிய முறையில் பாடல்களை கொடுப்பதில் வல்லவர். இவர் ஏராளமான வெற்றிப் பாடல்களை கொடுத்து மகிழ்வித்தார். எளிமையான மனிதர். இவரின் மறைவு அதிர்ச்சியை கொடுக்கிறது.
பிறைசூடன் மறைவு இலக்கிய உலகத்திற்கும், திரை உலகத்திற்கும் மாபெரும் இழப்பு” என்று கூறியிருக்கிறார்.
பிறைசூடன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜி.கே.வாசன், “தமிழக மக்களின் எண்ணங்களை தன்னுடைய பாடல்கள் மூலம் பிரதிபலித்தவர் பிறைசூடன். பல நல்ல திரைப் பாடல்களையும், பக்தி பாடல்களையும் வழங்கியுள்ளார். பெருந்தலைவர் காமராஜரால் ஈர்க்கப்பட்டவர். அவரைப் பற்றி பல மேடைகளில் பிறைசூடன் பேசியுள்ளார். அவரின் இழப்பு திரையுலகத்திற்கு மட்டுமல்லாமல் தமிழகத்துக்கும் பேரிழப்பு” என்று கூறியிருக்கிறார்.