நடப்பு ஐபிஎல் சீசனின் 55-வது லீக் ஆட்டத்தில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 235 ரன்களை எடுத்தது. அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முதலில் பேட் செய்து 200 ரன்களுக்கு மேல் எடுத்து, ஹைதராபாத் அணியை 65 ரன்களில் வீழ்த்தினால் மட்டுமே முடியும் என்ற நிலை இருந்தது. மும்பை அணி பேட்டிங்கில் அதை செய்தது.
அந்த அணி பேட் செய்த போது ‘மேட்ச் பிக்ஸிங்’ என்ற வார்த்தை இணையத்தில் உலாவின. அதுவும் மும்பை அணியை குறிவைத்து அந்த ‘டாக்’ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தன. குறிப்பாக அந்த அணியின் உரிமையாளர் முகேஷ் அம்பானியை சுற்றியும் இருந்தன.
இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியின் வீரர்கள் கேட்ச் டிராப் செய்தது, ஆடும் லெவன் தொடங்கி அனைத்தும் விமர்சிக்கப்பட்டன.
அதில் சில கமெண்ட்டுகளை இங்கு பார்க்கலாம்.
“மேட்ச் பிக்ஸிங் குற்றத்தில் ஈடுபட்டு இரண்டு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டவர்கள் மும்பை மற்றும் ஹைதராபாத் அணியின் ஆட்டத்தை பார்த்து கண்ணீர் விடுவார்கள்”, “களத்தில் மும்பை அணிக்காக விளையாடுவது மொத்தம் 13 பேர். அம்பயர் இருவரையும் சேர்த்து”, “ஆட்டம் முடிந்த கையோடு அம்பானியை பார்க்க SRH வீரர்கள் ஓட்டம் பிடிப்பார்கள்!” என்றெல்லாம் கமெண்டுகள் பறந்தன.
இருந்தும் ஹைதராபாத் அணியை 65 ரன்களுக்குள் கட்டுப்படுத்த மும்பை அணி தவறியதால் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்பை இழந்தது. அதன் பிறகு மும்பை அணிக்கு ஆதரவாக நெட்டிசன்கள் சிலர் கமெண்ட் செய்திருந்தனர்.
“மும்பை தோற்றால் அதற்கு காரணம் ரோகித். வெற்றி பெற்றால் அதற்கு காரணம் அம்பானி!” என மும்பைக்கு ஆதரவாக கருத்துகள் வந்தன.