நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள ஒரு பாக்கு தோட்டத்துக்கு இரவு நேரத்தில் உணவு தேடி யானைக்கூட்டம் ஒன்று வந்திருக்கிறது.அங்கிருந்த ஒரு சதுப்பில் சிக்கி யானை குட்டி ஒன்று சிக்கியிருக்கிறது. மற்ற யானைகள் பல மணி நேரம் மீட்க முயன்றும் முடியாததால், அந்த யானை குட்டி இறந்திருக்கிறது. இறந்த குட்டியின் தாய் உட்பட மூன்று யானைகளும் இறந்த குட்டியின் உடலை விட்டு நகராமல் கடந்த இரண்டு நாள்களாக பாசப் போராட்டம் நடத்தின. யானை குட்டியின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து மூன்று யானைகளும் உடலை விட்டு நகர்ந்து காட்டுக்குள் சென்றன.
யானை குட்டியின் உடலை மீட்டு கூறாய்வு செய்த வனத்துறையினர், உடலை அங்கேயே புதைக்கத் திட்டமிட்டனர். ஆனால் இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு வழியில்லாமல், யானையின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி ஒரு கிலோமீட்டர் தூரம் வரை சுமந்து சென்று வருவாய் நிலத்தில் புதைத்தனர்.
இந்த துயரம் குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அலுவலர் ஒருவர், “காட்டுக்குள் யானைகள் இறந்துவிட்டால் உடற்கூறாய்வு செய்துவிட்டு தந்தம் உள்ளிட்டவற்றை மட்டும் எடுத்து விட்டு யானையின் உடலை அப்படியே விட்டுவிடுமோம். அது மற்ற சில உயிரினங்களுக்கு உணவாக மாறும். ஆனால் தனியார் நிலங்களில் யானைகள் இறந்தால் புதைக்க வேண்டியுள்ளது. சில இடங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.அப்படிதான் இங்கும் நடந்தது.சுமார் 1,500 கிலோ எடையுள்ள இந்த யானையின் உடலை துண்டு துண்டாக வெட்டி அருகில் உள்ள வருவாய்த்துறை நிலத்துக்கு எடுத்துச் சென்று ஜே.சி.பி இயந்திர உதவியுடன் குழிதோண்டி புதைத்தோம்.கொட்டும் மழையில் வேட்டைத்தடுப்பு ஊழியர்கள் படாத பாடுபட்டார்கள்”என்றார்.
Also Read: மின்சாரம் தாக்கி இறந்த ஆண் யானை… ரகசியமாக புதைப்பு? ஊட்டியில் பகீர் சம்பவம்!
இது குறித்து அந்த பகுதி மக்கள்,”யானை இறந்த பகுதியில் குடிநீர் கிணறு உள்ளது. இங்கு புதைத்தால் குடிநீர் பிரச்னையாகிவிடும் அதனால் தான் எதிர்ப்பு தெரிவித்தோம்”என்றனர்.