சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் ரஜினியின் ‘அண்ணாத்த’ வருகிற தீபாவளியன்றும், விஜய்யின் ‘பீஸ்ட்’ 2022 பொங்கலுக்கும் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பு நிறுவனங்களே அதிகாரப்பூர்வாக அறிவித்துவிட்டனர். ஆனால், கடந்த சில நாள்களாக ‘அண்ணாத்த’ பொங்கலுக்கும், ‘பீஸ்ட்’ அடுத்த ஏப்ரல் மாதத்திலும் வெளியாகும் என பேச்சுகள் பரவிவருகிறது.
“தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் இப்போது ஐம்பது சதவிகித இருக்கைகளுக்கே அனுமதி உள்ளது. பெரிய பட்ஜெட் படங்களை இப்போதைய சூழலில் ரிலீஸ் செய்தால், முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க முடியாது என்பது நூறு சதவிகிதம் உண்மை. தவிர கேரளாவில் தியேட்டர்கள் சரியாக திறக்கப்படவில்லை, பல வெளிநாடுகளிலும் அதே நிலைதான் நீடிக்கிறது. எஃப்.எம்.எஸ் ரைட்ஸ் என்று சொல்லப்படும் வெளிநாட்டு மார்க்கெட் ரஜினிக்கு அதிகம் உண்டு.
இதனால் வெளிநாட்டு மார்க்கெட்டும் சேர்ந்தால்தான் லாபம் எடுக்க முடியும். இதனை கருத்தில் கொண்டே, ‘அண்ணாத்த’ ரிலீஸ் பொங்கலுக்கு தள்ளிப் போகிறது என பேச்சு கிளம்பியிருக்கலாம். விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை சன் பிக்சர்ஸே தயாரிப்பதால், பொங்கலுக்கு ‘அண்ணாத்த’வை ரிலீஸ் செய்வதில் சிக்கல்கள் இருக்காது. விஜய்யின் ‘பீஸ்ட்’டை ஏப்ரலுக்குத் தள்ளிவைப்பதால், நிச்சயம் அது கோடை கொண்டாட்டமாகத்தான் அமையும். இதனிடையே சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸ் செய்யவிருக்கின்றனர். அதில் இன்னும் மாற்றம் வரவில்லை” என்கிறார்கள் திரையுலகை சேர்ந்தவர்கள்.
ரஜினியின் ‘அண்ணாத்த’ உண்மையிலேயே பொங்கலுக்குத்தானா என தயாரிப்புத் தரப்பில் விசாரித்தால், “இப்படி ஒரு தகவல் எப்படி உருவாச்சுனே எங்களுக்குத் தெரியாது. தயாரிப்பு நிறுவனம் ‘அண்ணாத்த ‘படத்தை தீபாவளி ரிலீஸ்னு அறிவிச்சதால, படத்தைத் தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரும் வேலைகளில் இயக்குநரும் மொத்த டீமுமே தீவிரமா உழைச்சிட்டு இருக்கோம். படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகுதுனு பரவுற செய்தியில் உண்மை இல்லை இப்ப போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் டீசர் வேலைகள்ல கவனம் செலுத்திட்டு இருக்கோம்” என்றார்கள்.
யார் சொல்வது உண்மை என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்!