நெல்லை மாவட்டம் வள்ளியூர் காவல் சரகத்திற்குட்பட்ட பணகுடி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவர் அருள் ஜாக்சன் . அவரது சொந்த ஊர் கன்னியாகுமரி. அருள் ஜாக்சனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பணியாற்றியபோது சரிவர பணிக்கு வராமல் இருந்ததால் அவர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதனால் பனிஷ்மென்ட் டூட்டியாகக் கடந்த ஜனவரி மாதம் அவரை நெல்லை மாவட்டம் பணகுடி காவல் நிலையத்துக்கு மாற்றியுள்ளனர். ஆனாலும் அவரது நடவடிக்கையில் மாற்றம் இருக்கவில்லை. அதனால் போக்சோ வழக்கில் சிக்கியுள்ளார்.
பணகுடி காவல் நிலையத்தில் பணியாற்றியபோது அவருக்கு கொடைக்கானல் அருகே உள்ள குண்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே திருமணமாகி 13 வயது மகள் மற்றும் கணவருடன் வசித்து வந்த செல்வியை சிறுமியுடன் சேர்த்து அழைத்து வந்துவிட்டார்.
Also Read: புதுக்கோட்டை: பள்ளி மாணவியிடம் ஆபாசப் பேச்சு; அதிர்ச்சி ஆடியோ! -ஆசிரியர்மீது பாய்ந்த போக்சோ
பணகுடியில் செல்வியுடன் குடித்தனம் நடத்திய நிலையில், செல்வியின் 13 வயது மகளுக்கு தாயின் சம்மதத்துடன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தின் அலுவலர் சர்ச்சில் என்பவருக்கு புகார் வந்துள்ளது.
காவலர் மீது வந்த புகார் தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தினர் விசாரணை நடத்தியதில் அந்த புகார் உண்மை என்பது தெரியவந்ததால் காவலர் அருள் ஜாக்சன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த செல்வி ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் காவலர் அருள் ஜாக்சன் மற்றும் செல்வி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது . தலைமறைவாக இருக்கும் இருவரையும் பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.