இது நம்ம காலம் என சார்பட்டா படத்தில் இடம்பெறும் வசனத்தைப் போல, இது சிஎஸ்கே காலம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது தோனி தலைமையிலான படை. கடந்த சீசனில் அடைந்த அத்துனை அவமானங்களுக்கு தற்போது வெற்றி மேல் வெற்றிகளை குவித்து பதிலடி கொடுத்துள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் அணியாக கெத்தாக பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துள்ளது சிஎஸ்கே. 2020 ஐபிஎல் சீசன் மட்டும் சிஎஸ்கே வரலாற்றில் ஒரு கரும்புள்ளியைப் போல் அமைந்துவிட்டது. அந்த கரும்புள்ளியை நீக்கிவிட்டு பார்த்தால் தோனியின் படை 11 ஐபிஎல் சீசன்களில் அசால்ட்டாக பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துள்ளது. இன்னும் மூன்று போட்டிகள் மீதமிருக்கும் நிலையிலேயே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

image

கடைசி கட்டத்தில்தான் ஜெயிப்பீர்களா?

சென்னை அணியைப் பொறுத்தவரை பல போட்டிகளில் கடைசி ஓவரின் கடைசி கட்டத்தில்தான் வெற்றி பெறுவது தொடர் கதையாகி வருகிறது. ரசிகர்களை ஒருவிதமான பதற்றமான நிலைக்கு கொண்டு வந்து அவனுக்கு பீபி மாத்திரை எடுக்கும் அளவிற்கு இதய துடிப்புகளை கொண்டு சென்று இறுதியில் வெற்றிக் கனியை பரிசளித்துவிடுகிறது. அப்படியான ஒரு வெற்றிதான் இன்றைக்கும். 135 ரன்கள் தான் இலக்கு. இத்தனைக்கும் முதல் விக்கெட்டிற்கு ருதுராஜ் கெய்க்வாட் – டுபிளசிஸ் ஜோடி 75 ரன்கள் எடுத்துவிட்டார்கள். அப்படியிருந்தும் கடைசி ஓவரின் 5ம் பந்துவரை போட்டி வந்ததுதான் சிஎஸ்கே ரசிகர்களுக்கு நேர்ந்த சோதனை.

image

தோனியின் ஃபினிஸிங் சிக்ஸர்

வெற்றி இலக்கை சிக்ஸர் விளாசி எட்டுவது தோனியின் வாடிக்கைகளில் ஒன்றாக இருந்து வந்தது. தோனி கடந்த சில வருடங்களாக காண முடியாத நிலை இருந்து வருகிறது. சிக்ஸர் விளாசவில்லை என்றாலும் நிதானமாக அணிக்கு தேவையான ரன்களையாவது எடுங்கள் என்று ரசிகர்கள் வேண்டிக்கொள்ளும் அளவிற்கு தோனியின் பேட்டிங் ஃபார்ம் சில நேரங்களில் சென்றுவிட்டது. அந்த மாதிரியான நேரத்தில்தான் தோனி இன்று விளாசிய சிக்ஸர் ஆனந்த மழையை ரசிகர்களுக்கு பொழிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுவும், அந்த டாட் பந்துகள் தான் டென்ஷன் ஆக்கிவிடுகிறது. எப்படியிருந்தாலும் தோனி விளாசியது என்னவோ 11 பந்துகளில் 14 ரன்கள்தான், ஆனால், அந்த கிளைமேக்ஸ் சிக்ஸர்தான் மேட்டர்.

மீண்டும் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம்:

ஐபிஎல் போட்டிகள் என்றாலே ரன் குவிப்புக்கு பஞ்சம் இருக்காது. 200 ரன்களை கூட சில போட்டிகளில் எளிதில் அடித்துவிடுவார்கள். சிக்ஸர்களாக பறக்கவிட்டு பேட்ஸ்மேன்கள் வானவேடிக்கை காட்டுவார்கள். ஆனால், நடப்பு ஐபிஎல் சீசனின் கதையே வேறு. 150 ரன்கள் அடிப்பது என்பதே கடினமான ஒன்றாக இருந்து வருகிறது. பந்துவீச்சாளர் இந்த சீசனில் கெத்து காட்டி வருகிறார்கள். அந்த வகையில்தான் இன்றையப் போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 134/7 ரன்களுக்குள் கட்டுப்பட்டது. இந்த முறை சென்னை அணி ஹசல்வுட் 24/3, பிராவே 17/2 என அசத்திவிட்டனர். ஜடேஜாவும் ரன்களை விட்டுக்கொடுத்தாமல் அசத்தினார்.

image

ஹைதராபாத் அணியிலும் தொடக்கத்தில் ரன்களை கொடுத்தாலும் 10 ஓவர்களுக்கு பின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஜேஸன் ஹோல்டர் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். சந்தீப் சர்மாவும் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ரஷித் கான் 4 ஓவரில் 27 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் சாய்த்தார். அபிஷேக் சர்மா 2 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். 135 ரன்கள்தான் இலக்கு என்றாலும் கடைசி ஓவரில் 5வது பந்துவரை ஆட்டம் செல்வதற்கு இதுவும் ஒரு காரணம். சென்னை அணியில் சிறப்பாக பந்துவீசிய ஹசல்வுட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மிரட்டும் ஓபனர்கள் – சொதப்பும் மிடில் ஆர்டர்

சென்னை அணியை பொறுத்தவரை அதன் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டுபிளசிஸ் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ருதுராஜ் மிகவும் அற்புதமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நடப்பு சீசனில் 11 போட்டிகளில் விளையாடி இதுவரை 407 ரன்கள் குவித்துள்ளார். இதில் மூன்று அரைசதம் அடித்துள்ளார். இந்தப் போட்டியில் 45 ரன்கள் குவித்தார். அதேபோல், டுபிளசிஸ் 11 போட்டிகளில் 435 ரன்கள் குவித்து உள்ளார். இந்தப் போட்டியில் 41 ரன்கள் எடுத்து இருந்தார். இவர்கள்தான் சென்னை அணியின் வெற்றிக்கான துருப்புச் சீட்டாக உள்ளனர். இவர்கள் ஆட்டமிழந்த உடனேயே சீட்டுக் கட்டை போலவே சிஎஸ்கேவின் விக்கெட்டுகள் சரிந்துவிடுகிறது. ஒருவரும் நிலைத்து நின்று 30 ரன்களுக்கு மேல் குவிக்க தவறிவிடுகின்றனர். பொறுப்பாக வெற்றிவரை கொண்டு செல்ல மிடில் ஆர்டரில் ராயுடு, மொயின் அலி உள்ளிட்டோர் முழு ஃபார்ம்க்கு வர வேண்டும். அப்பொழுதுதான் சிஎஸ்கே முழுமையாக சாம்பியன்ஸ் டீம் ஆக தொடர்ந்து ஜொலிக்க முடியும்.

image

வெளியேறிய சன்ரைசர்ஸ்

சென்னை அணி அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்ததை போல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. புள்ளிப்பட்டியலில் 9 வெற்றிகளுடன் முதலிடத்தில் தொடரும் சிஎஸ்கே 1.002 என்ற ரன் ரேட்டையும் வைத்துள்ளது. ரன் ரேட் சில நேரங்களில் முதல் இரண்டு இடங்களை உறுதி செய்யவும் பயன்படும்.

தோனி 100வது கேட்ச்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விக்கெட் கீப்பராக தோனி 100 கேட்சுகளை பிடித்துள்ளார். இந்தப் போட்டியில் மொத்தம் மூன்று கேட்சுகளை தோனி பிடித்து இருந்தார். 

image

பேட்ஸ்மேனாக சிறப்பான பங்களிப்பை செலுத்த முடியாவிட்டாலும் ஒரு கேப்டனாக மிக அற்புதமான பணியை செய்து வருகிறார் தோனி. அத்துடன் விக்கெட் கீப்பரிலும் ஸ்பெஷல் என்பதையும் உறுதி செய்து வருகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.