ஆஃப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் பெண்களுக்கு அங்கு விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகள், ஆஃப்கன் பெண்களை நிலைகுலையச் செய்துள்ளன. பல பெண்கள் வீதிகளில் போராடிக் களைத்தனர். `பெண்கள் இல்லாமல் செயல்பட முடியாத வேலைகளுக்கு மட்டுமே பெண்கள் செல்லலாம், இதர வேலைகளைத் தவிர்க்க வேண்டும். அரசியல் உள்ளிட்ட சமூகச் சுமைகளை பெண்கள் மீது சுமத்துவதற்கு இஸ்லாமில் அனுமதி இல்லை’ என்று தெரிவித்தனர் தாலிபான்கள்.
வீட்டை விட்டு பெண்கள் தனியாக வெளியே வர கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் ஆஃப்கானில்தானில் அறிவிக்கப்பட்டுள்ளன. சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருந்த பெண்கள் தேடிக் கொல்லப்பட்டனர். இந்தச் சூழலில், ஆஃப்கன் பெண் தொழிலதிபர் ஒருவர், “தாலிபான்களுக்கு நான் அஞ்சப்போவதில்லை, என் பணியைத் தொடர்வேன்” எனக் கூறி உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
Also Read: பணியிடத்தில் பாலியல் கொடுமை: விமானப்படை அதிகாரிக்கே இதுதான் நிலை; நீங்கள் தேசத்துக்குப் பாதுகாப்பா?
உலகம் முழுவதும் விற்பனையாகும் கஞ்சாவில் 80-90 சதவிகிதம் ஆஃப்கானிஸ்தானில் உற்பத்தியாகிறது. ஓப்பியம் எனப்படும் கஞ்சா செடி வளர்ப்பு அங்கு அதிக அளவில் இருந்தது. ஆஃப்கானிஸ்தானில் மேற்கத்திய ஆதிக்கம் வளர்ந்த பின்னர், ஓப்பியத்திற்கு மாற்றாக குங்குமப்பூ வளர்ப்பது ஊக்குவிக்கப்பட்டது. பலர் குங்குமப்பூ பயிரிடத் தொடங்கினர். ஒரு கிலோ குங்குமப்பூ 5,000 டாலர்கள் வரை விலை போகின்றது.
ஆஃப்கானிஸ்தானில் குங்குமப்பூ ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார், பெண் தொழிலதிபர் ஷஃபாகி அட்டாய். `பாஷ்தோன் ஜேர்கோன் சாஃப்ரான் விமன்ஸ் கம்பெனி’ என்னும் தன் நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறார். இவர் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் அவர்களது குடும்பத்திற்கு முக்கிய வருவாய் மூலமாக இருப்பதால், இவரது நிறுவனத்தை நம்பி பல குடும்பங்களும் இருக்கின்றன. அட்டாயின் நிறுவனம் வருடத்திற்கு 200 முதல் 500 கிலோ குங்குமப்பூ ஏற்றுமதி செய்யக் கூடியது.
Also Read: `பிரசவம் பார்க்கிற எங்களுக்கே மகப்பேறு விடுப்பு இல்லை!’ – விரக்தியில் அரசு பெண் மருத்துவர்கள்
ஆனால், தாலிபான்கள் ஆட்சி அமைந்த பின்னர் அட்டாயின் குங்குமப்பூ ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அட்டாய் கூறுகையில், “இந்தத் தொழிலை இத்துணை பெரிதாக வளர்க்கக் கடுமையான பாதைகளைக் கடந்து வந்துள்ளேன். தாலிபான்கள் என்ன கெடுபிடி விதித்தாலும் எதிர்கொள்வேன்” என்று கூறியுள்ளார். எனினும், தங்களது 20 ஆண்டுக்கால உழைப்பு தாலிபான்களால் வீணாகிவிடுமோ என அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார்.
“குங்குமப்பூ வளர்ப்பு விவசாயம் சார்ந்த தொழில் என்பதால் தாலிபான்கள் இதில் தலையிட மாட்டார்கள் என நம்புகிறேன். அவர்கள் ஏதேனும் தடை விதித்தாலும் துவண்டு போகாமல் துணிந்து நிற்போம். வீட்டிலேயே இருந்து விட மாட்டோம், நாங்கள் கடினமாக உழைத்திருக்கிறோம். அவர்கள் காதுகளை எட்டும் வரை எங்கள் குரலை உயர்த்திடுவோம்” எனக் கூறுகிறார் அட்டாய்.