ஆந்திரா மற்றும் ஒடிஷா இடையே குலாப் புயல் கரையை கடந்தபோது மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான குலாப் புயல் ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினம், ஒடிசாவின் தெற்கு கடலோர பகுதி இடையே கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடந்தபோது ஆந்திராவின் கலிங்கப்பட்டினம், ஸ்ரீகாகுளம் மற்றும் வடக்குப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலிங்கப்பட்டினத்தில் மட்டும் 61 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, ஆயிரத்து நூறு பேர் தங்க வைக்கப்பட்டதாக இணை ஆட்சியர் சுமித் குமார் தெரிவித்துள்ளார்.

image

ஸ்ரீகாகுளத்தில் ஆயிரத்து 400 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கரையை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த மீனவர்களின் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மீனவரை காணவில்லை. ஆந்திராவின் வடக்குப்பகுதியில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்களும் சேதமடைந்திருப்பதால் மின்விநியோகம் தடைபட்டுள்ளது.

அதே போல், ஒடிசாவின் கோபால்பூர் ஒட்டிய கடலோர பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், மரங்கள் வேரோடு சாய்ந்து முறிந்து விழுந்தன. கஞ்சம் மாவட்டத்தில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 ஆயிரம் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

image

குலாப் புயல் ஆந்திராவில் கரையை கடந்த நிலையில் ஓடிஷாவின் உட்புற பகுதிகள் வழியாக நகர்ந்து பின்னர் வலுவிழக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் வழுவிழந்தாலும் கனமழை தொடரும் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.