காலையில் சிவாவை பார்த்து மன்னிப்பு கேட்காமல் அலுவலகத்துக்கு வரும் காயத்ரி நடந்ததை நினைத்து வருத்தத்துடன் இருக்கிறாள். காயத்ரிக்கு சுந்தரின் அக்கா போனில் அழைக்கிறார். காயத்ரிக்கும் சுந்தருக்கும் ஏதாவது பிரச்னையா என கேட்கிறார். முன்தினம் அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று விட்டதாக காயத்ரி சொல்கிறாள். சுந்தர் அழைக்கும்போது பேச முடியவில்லை என்றும் திரும்ப சுந்தரை அழைத்து பேச மறந்து விட்டதாகவும் சொல்கிறாள். ”சுந்தர் அழைக்கவில்லை என்றாலும் நீயே அவனிடம் கால் செய்து பேசு” என்றும் சுந்தரிடம் நன்றாக பேசும்படியும் சுந்தரின் அக்கா சொல்கிறார்.

”பசங்க பார்க்கறதுக்குத்தான் தைரியசாலியா தெரிவாங்க. இந்த மாதிரி விஷயங்களில் சென்சிட்டிவா சட்டுன்னு உடைஞ்சு போயிடுவாங்க… பொண்ணுங்க நாமதான் புரிஞ்சு நடந்துக்கணும்” என்கிறார். கேட்டதும் “அடடே சங்கரி பாலா மேடம் நீங்களா?” என்றிருந்தது.

AKS – ஆதலினால் காதல் செய்வீர்

பெண்ணுக்கு எதிரி பெண்ணே என்பதில் உடன்பாடில்லை. ஆனால் பல சமயங்களில் அன்பின் பேரால் கூட தெரிந்தோ தெரியாமலோ பெண்களே பெண்களின் உரிமை மற்றும் சுதந்திரத்துக்கு எதிராக செயல்படுகிறார்கள். சுந்தரின் அக்கா, காயத்ரி சுந்தர் இருவரின் மீதுள்ள அக்கறையில் சுந்தரை அழைத்து பேசச் சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் ஒருதலைபட்சமாக சுந்தரை பற்றி மட்டுமே யோசிக்கிறார். காயத்ரியின் விருப்பம் என்னவாக இருக்க வேண்டும், காயத்ரி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை சுந்தர் மட்டுமின்றி அவனது அக்காவும் தீர்மானிக்கிறார்.

காயத்ரி தன்னுடைய உணர்வுகளை வெளிப்படையாக பேசுவதற்கான “Space”ஐ ஒரு பெண்ணாக சுந்தரின் அக்கா ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும். அதை செய்யவில்லை. குறைந்தபட்சம் ஒரே குடும்பத்திற்குள் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் இந்த புரிதலுடன் இருப்பது அவசியம்.

சிவாவின் பரிந்துரையின் பேரில் சிவாவின் நண்பனுடைய மேட்ரிமோனியல் அலுவலகத்தில் வேலையில் சேர்வதற்காக நேர்முகத் தேர்வுக்காக வருகிறாள் கவிதா. அவளுக்கு விருப்பமில்லை என்றாலும் பாண்டியனின் கட்டாயத்தின் பேரில் வந்திருக்கிறாள். திருமண ஏற்பாட்டு மையத்தை பற்றி தங்களது எண்ணம் என்ன என்கிற கேள்விக்கு கவிதா, ”வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது ஒருவரது தனிப்பட்ட விருப்பம். அதில் சாதி, மதம், பாலினம் என்று எதுவும் தலையிடக் கூடாது” என்கிறாள். மேற்கொண்டு கவிதா பேசியவை பிடித்ததால் அவளுக்கு வேலை கொடுக்கும் முடிவுக்கு வருகிறான் சிவாவின் நண்பன்.

AKS – ஆதலினால் காதல் செய்வீர்

ஆனால், கவிதா தனக்கு இந்த வேலை தேவையில்லை என்று கூறுகிறாள். மேலும் தனக்கு யாருடைய பரிந்துரையின் பேரில் கிடைக்கும் வேலையும் வேண்டாம் என்றும் குறிப்பாக சிவாவின் மூலமாக கிடைக்கும் வேலை தேவையில்லை என்றும் சொல்கிறாள். மேலும் நேர்முகத் தேர்வுக்கு செல்லவில்லை என்றால் தன்னுடைய நண்பன் பாண்டியன் திட்டுவான் என்பதாலும் தன்னுடைய தகுதி என்ன என்று அறிந்து கொள்ளவும் அங்கு வந்ததாக சொல்கிறாள்.

கவிதாவும், காயத்ரியை போல தன்னை பற்றியே அதிகம் சிந்திக்கிறாளோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதற்கு முன்பும் கவிதா ஒரு வேலைக்காக நேர்முகத் தேர்வுக்கு செல்வாள். அது டேட்டா என்ட்ரி வேலை என்பதை அறிந்துதான் சென்றிருப்பாள். இன்றைய தலைமுறையில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே டேட்டா எண்ட்ரி வேலை என்றால் என்னவென்று தெரிந்திருக்கும். இவ்வளவு புத்திசாலி பெண்ணான கவிதாவுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

அங்கே சென்று வேலைக்கு தேர்வான பின்பு தனக்கு அந்த வேலை வேண்டாம் என்றும் உங்கள் நேரத்தை வீணாக்கியதற்கு மன்னித்து விடுங்கள் என்றும் மிக எளிதாக சொல்லி விட்டு வருவாள். அதேபோல் இந்த மேட்ரிமோனியல் நேர்முகத் தேர்விலும் தனக்கு திறமை இருக்கிறதா என்று சோதிப்பதற்காக அங்கு வந்திருப்பதாக சொல்கிறாள். இரண்டு இடங்களிலும் நேர்முகத் தேர்வுக்கு அழைத்தவர்களை பற்றியும், அவர்களது நேரத்தை வீணாக்குவது பற்றியும் கவிதாவுக்கு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லை. சிவா பரிந்துரைத்ததற்காக அல்ல, உங்களது திறமையின் அடிப்படையில் உங்களை தேர்வு செய்கிறேன் என்று கூறும்போது கவிதா வேலையை ஏற்றுக் கொள்கிறாள்.

காயத்ரி முதல்முறையாக சுந்தருக்கு போனில் அழைத்திருப்பது சுந்தரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. காயத்ரி அலுவலகத்தில் சிவாவுக்கு நடந்ததைப் பற்றி சுந்தரிடம் கூறுகிறாள். காயத்ரிக்கு ‘ஓட்ட வாய் காயத்ரி’ என்று பட்டம் கொடுக்கலாம். அந்த அளவுக்கு எல்லாவற்றையும் உளறுகிறாள்.

AKS – ஆதலினால் காதல் செய்வீர்

”டீம் லீடர் எதற்கெடுத்தாலும் திட்டிக் கொண்டே இருப்பதால் அந்த கோபத்தில் நான் இப்படி செய்து விட்டேனோ?” என்று தன் மைண்ட் வாய்ஸை சத்தமாக சுந்தரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள் காயத்ரி. சிவா காயத்ரியை திட்டுவான் என்று சொன்னதற்கு சுந்தர் கோபப்படுகிறான். ‘’நீ அப்படி அங்கே வேலை செய்யவேண்டிய அவசியம் இல்லை’’ என்கிறான். காயத்ரி கால் டாக்ஸியில் நடந்த சம்பவத்தை கூறுகிறாள். கால் டாக்ஸியில் ஷேரிங் முறையில் எதற்கு சென்றாய் என்று சுந்தர் கேட்கும்போது காயத்ரி தனக்கு அது பற்றி எதுவுமே தெரியாது என்றும் புனிதா தான் ”புக்” செய்தாள் என்றும் கூறுகிறாள். சுந்தர் மீண்டும் மீண்டும் காயத்ரியிடம் ‘’சிவா தவறாக நடக்க முயற்சி செய்தானா’’ என்பதை கேட்டுக் கொண்டே இருக்கிறான்.

காயத்ரி தான் மட்டும் நல்ல பெயர் வாங்கினால் போதும் என்கிற மனநிலையில் இருக்கிறாள். சராசரி பெண்ணாக தன்னை காப்பாற்றிக் கொள்ள எந்த கட்டத்திலும் மற்றவர்களை மாட்டிவிடும் அளவிற்கு செல்கிறாள். கால் டாக்ஸி விஷயத்தில் சுந்தர், புனிதாவை பற்றி என்ன நினைப்பான் என்பதை பற்றியெல்லாம் காயத்ரிக்கு கவலை இல்லை. தான் அப்பாவி என்பதை காட்டிக் கொள்ள மட்டுமே காயத்ரி முனைப்பாக இருக்கிறாள்.

AKS – ஆதலினால் காதல் செய்வீர்

மூன்றாம் கட்டமாக காயத்ரி உணவகத்தில் நடந்த சண்டை பற்றியும், சிவா தனக்காகத்தான் மற்றவர்களிடம் சண்டை போட்டான் எனவும் கூறுகிறாள். சுந்தர் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விடுகிறான். ரெஸ்டாரன்ட் கதையை கேட்டதும் சுந்தர், சிவா காயத்ரியை இம்ப்ரஸ் செய்ய ஹீரோயிஸம் செய்து அடி வாங்கியதாக கூறுகிறான். அதனால் சிவா அடி வாங்கியதை பற்றி கவலைப்படாமல் முடிந்தால் டீம் மாறிக்கொள் என காயத்ரிக்கு அறிவுரை சொல்கிறான்.

சிவா ’ஹீரோயிசம்’ காட்ட முயற்சி செய்ததாக சுந்தர் கூறும் காட்சி பலமுறை நிஜவாழ்வில் கண்ட ஒன்று. பதின்வயதில் தொலைக்காட்சியில் கதாநாயகனின் அதிரடி காட்சிகளை ரசித்து பார்க்கும்போது, அந்த காட்சி தவறு எனவும், அடிதடியில் ஈடுபடும் கதாநாயகன் பொறுக்கி என்பது போலவும் அப்பா பேசுவார். எதற்கென்றால் அப்படியான ஆட்களை நிஜ வாழ்க்கையில் சந்திக்கும்போது நமக்கு அந்த ஆண்கள் மீது ஈர்ப்பு வந்து விடக்கூடாது என்பதற்காக. ஏனெனில் இந்த சமூகம் சுந்தரை போன்றவர்கள்தான் நல்லவர்கள் என்று ‘Define’ செய்து வைத்திருக்கிறது. அதையேதான் கொஞ்சம் பொஸசிவ்னெஸுடன் சுந்தரும் காயத்ரியிடம் சொல்கிறான்.

சுந்தர் காயத்ரியிடம் அவளுக்கு எப்போதும் தான் தான் முதன்மையாக இருக்கவேண்டும் என்கிறான். காயத்ரியிடம் நெருங்கி வரும் சுந்தரை அவள் எப்படி சமாளிக்கப் போகிறாள்?

காத்திருப்போம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.