டெல்லி ரோகிணி கீழமை நீதிமன்றத்தில் துபாக்கிச்சூடு நடந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. டெல்லி கீழமை நீதிமன்றங்களில் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி கீழமை நீதிமன்றத்தில் நீதிபதி முன் ரவுடி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஜித்தேந்தர் ஜோகாவை ஆஜர்படுத்துவதற்காக காவல்துறையினர் அவரை நீதிமன்றத்திற்குள் அழைத்து வந்தனர். அறை எண் 207இல் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது வழக்கறிஞர் உடையில் இருந்த ஜித்தேந்தரின் எதிரிகள் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினர். சுமார் 40 ரவுண்டுகள் வரை துப்பாக்கியால் சுட்ட ரவுடிகள் நீதிபதி முன்னிலையிலே ஜித்தேந்தரை படுகொலை செய்தனர். இதைக் கண்ட வழக்கறிஞர்களும், மக்களும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அப்போது பதில் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் ரவுடிகள் இருவரையும் சுட்டுக் கொன்றனர். இதில் பெண் வழக்கறிஞர் உள்ளிட்ட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. டெல்லியில் உள்ள ரோகிணி கீழமை நீதிமன்றத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 4 முறை துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாகத் தெரிகிறது. நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.