ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் ஆத்மகூரில் கொண்டம்மா(29) மற்றும் அவரது கணவர் பெஞ்சலையா ஆகியோர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கொண்டம்மாவுக்கு திருமணத்தைத் தாண்டிய உறவு இருப்பதாகப் பெஞ்சலையாவுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவர் தொடர்ந்து கொண்டம்மாவைத் தொந்தரவு செய்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த கொண்டம்மா தன் இரு குழந்தைகள் முன்னிலையில் தனது வாழ்வை முடித்துக்கொள்ள துணிந்துள்ளார்.
சேலையை சீலிங் ஃபேனில் மாட்டி தூக்கிடப் போகும் மனைவியைக் காப்பாற்றாமல் தன் மொபைலில் வீடியோ பதிவு செய்திருக்கிறார் பெஞ்சலையா. கொண்டம்மா தூக்கிட்டு இறந்த பின்னர் தான் பதிவு செய்த வீடியோவை அவரது உறவினர்களுக்கு அனுப்பியிருக்கிறார் பெஞ்சலையா. கொண்டம்மாவின் உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர். பெஞ்சலையா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆத்மகூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் இதுகுறித்து கூறியபோது, “பெஞ்சலையா அவர் மனைவிமீது சந்தேகப்பட்டு அவரைக் கொடுமைபடுத்தத் தொடங்கியிருக்கிறார். கொண்டம்மாவின் உறவினர்கள் கொடுத்தத் தகவல் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளோம். குற்றவாளி மீது சட்ட நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.