ஊரக உள்ளாட்சித் தேர்தல் நெல்லை மாவட்டத்தில் வரும் 6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வார்டு கவுன்சிலர்கள், கிராம ஊட்ராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 2069 இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் பணி தீவிரமாக நடந்த வருகிறது.
மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் 43 கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அங்குள்ள வார்டுகளின் உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டினார்கள்.
மானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கானார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 22 வயது பொறியியல் பட்டதாரி பெண்ணான அருள் பிரியா என்பவர் தனது தாய் தந்தையுடன் வந்து இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
மானூர் ஒன்றியத்திற்குட்பட்ட மதவகுறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ரஸ்தா பகுதியைச் சேர்ந்த சுஜித்ரா என்பவர் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார். அதற்காக அவர் இன்று பிறந்து 16 நாள்களான கைகுழந்தையுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் பேசிய சுஜித்ரா, “மதவகுறிச்சி கிராமத்து மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. என்னை மக்கள் தேர்வு செய்தால் குடிநீர் தேவை, சாலை போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளைச் செய்துகொடுக்க நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.